பாலியல் தாக்குதல்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் வகையில் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டம் குறித்து மும்பை உயர் நீதிமன்றம் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. 


அதாவது, பாலியல் தாக்குதல்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கவே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் காதல் உறவிலோ அல்லது இருவரின் சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவில் ஈடுபடும் சிறார்களை தண்டிப்பதற்காக கொண்ட வரப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


வழக்கின் பின்னணி:


22 வயது நபர் ஒருவர், மைனர் பெண் ஒருவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 363, 376 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அனுஜா பிரபுதேசாய், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


குற்றம்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம், "பாதிக்கப்பட்ட டீன் ஏஜ் சிறுமி சம்பவம் நடந்துபோது போக்சோ சட்ட வரையறுத்தலின்படி குழந்தையாக இருந்தது உண்மையாக இருந்தாலும், சம்பவத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவரும் 22 வயது இளைஞராக இருந்திருக்கிறார்.


பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளிக்க வாக்குமூலத்தின்படி, இருவருக்கிடையே நடந்த உறவு சம்மதத்துடன் நடந்தது தெரியவந்துள்ளது. பிணை கேட்டு மனு தாக்கல் செய்த குற்றம்சாட்டப்பட்டவர் கடந்த 2021ஆம் ஆண்டு, பிப்ரவரி 17ஆம் தேதி முதல் காவலில் உள்ளார். 


மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து:


விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருப்பதை கருத்தில் கொண்டால், வழக்கின் விசாரணையும் உடனடியாக தொடங்க  வாய்ப்பில்லை. குற்றம்சாட்டப்பட்டவரை மேலும் காவலில் வைப்பது கடுமையான குற்றவாளிகளுடன் தொடர்பு கொள்ள வைக்கும். இது அவரது ஆர்வத்திற்கு தீங்கு விளைவிக்கும்" என தெரிவித்தது.


கடந்த 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், தனது மகள் வீடு திரும்பாததால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயால் அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டார். "கடந்த 2020ஆம் ஆண்டு, டிசம்பர் 27ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தனது நண்பருடன் இரண்டு முதல் மூன்று நாட்கள் தங்கியிருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


பெற்றோருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதால், வீட்டுக்குத் திரும்ப பயத்தில் இருந்ததாகத் தெரிகிறது. அப்போது, ஒரு நாள் இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் அவரை ஒரு குறிப்பிட்ட கட்டிடம் ஒன்றின் மொட்டை மாடிக்கு வரச் சொல்லி இருக்கிறார். அவரை வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்" என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.