Layers shot பெர்ஃப்யூம் வாசனை திரவிய நிறுவனம் ஒன்றின் சமீபத்திய விளம்பரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வந்தனர். நெட்டிசன்களின் கண்டனங்களை அடுத்து இந்த விளம்பரத்தை ட்விட்டர், யூட்யூப் தளங்களில் இருந்து நீக்குமாறு மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது அந்த விளம்பரம் குறித்து Layers shot நிறுவனம் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.


விளம்பரத்தில் உள்ள சர்ச்சை


ஒரு அறையில் ஒரு இளம் ஜோடி பாலுறவுக்கு தயாராகிறார்கள். அந்த அறையை தட்டாமல், கொள்ளாமல் உள்ளே நுழைகிறார்கள் அந்த ஆணின் நண்பர்கள். அதில் ஒருவர் கேட்கிறார், "ஷாட் எடுத்துக்கலாமா" என்று. இரட்டை அர்த்தத்தில் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு இளம் ஜோடி திரு திருவென முழிக்கிறார்கள். பின்னர் மேசையின் மீது இருக்கும் லேயர் ஷாட் ஸ்ப்ரேயை எடுத்து உடலில் அடித்துக்கொண்டு "இந்த ஷாட்டை சொன்னேன்" என்கிறார். வரையறை இன்றி பெண்களை இழிவுபடுத்தும் இந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் விமர்சித்தார்கள்.பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனத்தை பதிவிட்டனர். 






மகளிர் ஆணையம் கண்டனம்


Layers shot எனும் வாசனை திரவிய நிறுவனத்தின் இந்த விளம்பரத்துக்கு எதிராக முன்னதாகப் பதிவிட்ட டெல்லி மகளிர் ஆணையத் தலைவர், ”இந்த விளம்பரம் அச்சமுட்டூம் வகையில் உள்ளது.  கூட்டுப் பாலியல் வன்கொடுமை கலாச்சாரத்தை இவர்கள் தெளிவாக ஊக்குவிக்கிறார்கள். நிறுவன உரிமையாளர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதுகுறித்து டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, எஃப்ஐஆர் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி I&B அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்’ எனக் கூறினார். இது குறித்து அப்போதே  பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர், ”தவறான, இழிவான இந்த விளம்பரம் எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. இந்த விளம்பரத்தை ட்விட்டர், யூடியூப் தளங்களில் இருந்தும் உடனடியாக நீக்குமாறு ஏற்கெனவே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது என்றார்.


வருத்தம்..


இந்நிலையில் தங்களது விளம்பரம் குறித்தும், அது தொடர்பான விமர்சனங்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளது Layers shot. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், ''நாங்கள், உரிய மற்றும் கட்டாய ஒப்புதல்களுக்குப் பிறகே, விளம்பரங்களை ஒளிபரப்பியுள்ளோம். யாருடைய உணர்வுகளையும்,புண்படுத்தவோ, பெண்களை கொச்சப்படுத்தவோ எண்ணவில்லை. எவ்வாறாயினும், தனிநபரிடத்திலும் சமூகத்திலும் கோபத்தை ஏற்படுத்திய விளம்பரத்திற்காக நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.