இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதி அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.


அதில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இமாச்சலப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது.


இந்தத் தேர்தல் அறிக்கையை பாஜக தலைவர் ஜேபி நட்டா சிம்லாவில் முன்னதாக வெளியிட்டார். இந்தத் தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்கு முன் பொது மக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற குழு ஒன்றை பாஜக அமைத்திருந்தது. 


 






இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் புதிய முயற்சியாக பெண்களுக்கென தனி தேர்தல் வாக்குறுதி அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.


தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்



  • பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில்  பொது சிவில் சட்டம்.

  • படிப்படியாக 8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

  • மாநிலத்தில் புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

  • இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வக்ஃப் சொத்துக்களில் சட்ட விரோத செயல்களை தடுக்க பாஜக அரசு ஆய்வு நடத்தும்.

  • 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களும்,  உயர்கல்வி பயில்பவர்களுக்கு இலவச ஸ்கூட்டியும் வழங்கப்படும்.

  • அரசு வேலைகளில் பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ஆம் ஆண்டு, ஜனவரி 8ஆம் தேதியோடு முடிவடைகிறது. கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 68 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான முடிவுகள், டிசம்பர் 8ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளன.