ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது பாரத்பூர். இங்குள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையைாக பணியாற்றி வருபவர் மீராகுந்தல். அந்த பள்ளியில் கல்பனா பவ்ஸ்தர் என்ற மாணவி பயின்று வந்தார். தற்போது, அவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டார்.


பள்ளியில் நடைபெற்ற உடற்கல்வி பயிற்சியின்போது மீரா கல்பனாவை சந்தித்துள்ளார். கல்பனா கபடி விளையாட்டில் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். கல்பனா பள்ளிப்படிப்பை முடித்த பிறகும் இருவருக்கும் பழக்கமும் தொடர்ந்துள்ளது.


இருவரது பழக்கமும் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மீரா பிறப்பால் பெண்ணாக இருந்தால் தன்னை ஒரு ஆணாக அனர் கருதி வளர்ந்து வந்துள்ளார். கல்பனாவும் மீராவை காதலித்துள்ளார். தனது காதலியை கரம்பிடிப்பதற்காகவும், தன்னுடைய ஆசைக்காகவும் மீரா ஆணாக மாற முடிவெடுத்துள்ளார்.






மீராவின் முடிவுக்கு கல்பனாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், ஆணாக மாறிய பிறகு கல்பனாவை திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு மீரா ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சையை செய்துகொண்டார். ஆணாக மாறிய பிறகு மீரா தனது பெயரை ஆரவ்குந்தல் என்று மாற்றிக்கொண்டார்.


இந்த சூழலில், முழுமையாக ஆணாக மாறிய ஆரவ் குந்தலுக்கும், அவரது காதலி கல்பனாவிற்கும்  தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. இரு வீட்டார் சம்மதத்துடன் தற்போது இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.




இதுதொடர்பாக, பேசிய ஆரவ், “நான் பெண்ணாக பிறந்தாலும், என்னை நான் ஒரு ஆணாகவே கருதி வளர்ந்தேன். எனது பாலினத்தை மாற்றிக்கொள்ள முடிவு செய்தேன். இதற்காக, கடந்த 2019ம் ஆண்டு முதன்முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.


மணமகள் கல்பனா இதுதொடர்பாக கூறியதாவது, “நான் நீண்டகாலமாக ஆரவ்வை காதலித்து வருகிறேன். அவர் அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும் நான் அவரை திருமணம் செய்துகொண்டிருப்பேன்” என்று கூறியுள்ளார். இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றாலும், அந்த பகுதியில் இந்த திருமணம் பரபரப்பாகவே பேசப்படுகிறது.


இந்தியாவில் தற்போது இது போன்ற திருமணங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக கருதப்படுகிறது.


மேலும் படிக்க : EWS Quota EXPLAINED: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% ஒதுக்கீடு அறிமுகமானது எப்படி? விமர்சனங்களுக்கு ஆளாவது ஏன்?


மேலும் படிக்க : “ திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை; மிகவும் மன வேதனை” - முடி உதிர்வால் வாலிபர் தற்கொலை!