பீகார் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சாம்ராட் சௌத்ரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமாரை இறக்குவேன் என சபதம் எடுத்த அவர், இன்று அதே பொறுப்பில் அமர்ந்த சுவாரஸ்ய பின்னணி பற்றிப் பார்க்கலாம். 

Continues below advertisement

பீகாரின் நாயகன் நிதிஷ் குமார்

50 ஆண்டுகளுக்கும் மேலாக பீகார் அரசியலில் அசைக்க முடியாத அளவுக்கு நிதிஷ் குமார் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஒரு மாபெரும் ஆளுமையாக பார்க்கப்படும் அவர் கடந்த 26 ஆண்டுகளாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். 1974ம் ஆண்டு ஜனதா தளம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் தற்போது மக்களவை எம்.பி.யாக பொறுப்பேற்பதால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

75 வயதான நிதிஷ் குமார் 10 முறை முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்தியாவின் நீண்ட கால முதலமைச்சர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக உள்ளார். இந்த நிலையில் தான் சாம்ராட் சௌத்ரி பீகார் முதலமைச்சராக  பதவியேற்றுள்ளார். 

Continues below advertisement

யார் இந்த சாம்ராட் சௌத்ரி?

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் சாம்ராட் சௌத்ரி 1968ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை சகுனி  தாராபூர் தொகுதியில் இருந்து ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தாயார் பார்வதி செயல்படாமல் இருக்கும் சம்தா கட்சி சார்பில் 1998ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தாராபூர் தொகுதியில் தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேரும் மொத்தம் 12 முறை போட்டியிட்டு 9 முறை வெற்றி பெற்றிருக்கின்றனர். 

இந்த நிலையில் தான் சாம்ராட் சௌத்ரி 1990ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். 1999ம் ஆண்டு இருந்த பீகார் அரசில் வேளாண் துறை அமைச்சராக பதவியேற்றார். 2000 மற்றும் 2010ம் ஆண்டுகளில் பர்பட்டா தொகுதியில் வெற்றி பெற்ற அவர், 2014ம் ஆண்டு அமைந்த பீகார் அரசில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவியேற்று பொறுப்பேற்றார். 2025ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தாராபூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

ஆரம்பத்தில் லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பின்னர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றில் செயல்பட்டு வந்த சாம்ராட் சௌத்ரி, 2014ம் ஆண்டு கட்சியைப் பிளவுப்படுத்த முயற்சித்தார். பத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பாஜகவில் இணைந்தார். 2018ல்  பாரதிய ஜனதா கட்சியில் பீகார் பிரதேசத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2021ம் ஆண்டு நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜக சார்பில் இடம்பெற்று உள்துறை துறை அமைச்சராக பதவி வகித்தார். 

2023ம் ஆண்டு மார்ச் முதல் 2024 ஜூலை வரை பாஜகவின் பீகார் மாநிலத் தலைவராகவும், அம்மாநிலத்தின் விளையாட்டு, நிதி, உள்துறை அமைச்சர், மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் சாம்ராட் சௌத்ரி பதவி வகித்துள்ளார். 2023ல் நிதிஷ் குமார் அரசு நடத்திய சாதி கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் மக்கள் தொகையில் 4.3 சதவீதத்தைக் கொண்ட, அரசியல் செல்வாக்கு மிக்க குஷ்வாஹா பகுதியைச் சேர்ந்தவர் தான் சாம்ராட் சௌத்ரி. இதனால் அவரது பெயரை பாஜக டிக் அடித்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. 

இதே 2023ம் ஆண்டு சாம்ராட் சௌத்ரி ஒரு வாக்குறுதி அளித்தார். அதாவது அவர் பாஜகவில் சேர்ந்த காலக்கட்டத்தில் தலைப்பாகை அணிய தொடங்கினார்.  அம்மாநில அரசியலில் எப்போதும் அரசியல் சந்தர்ப்பவாதியாக விளங்கும் நிதிஷ் குமாரை பதவியிலிருந்து இறக்கிய பின்னர் தலைப்பாகையை கழற்றுவேன் என சபதம் எடுத்தார். சரியாக ஓராண்டு கழித்து அந்த தலைப்பாகையை அவிழ்த்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சமர்பித்தார். அதற்கு காரணம் நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி வைக்க சம்மதித்தது தான் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.