பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான முதற்கட்ட விவரங்களை பிகார் அரசு வெளியிட்டது. 


சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள்:


அதன்படி, பிகார் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பட்டியலின, பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. மாநில மக்கள் தொகையில் 15.5 சதவகிதத்தினர் பொது பிரிவினர் என கண்டறியப்பட்டது. 


இதை தொடர்ந்து, சாதிவாரி பொருளாதார, கல்வி நிலை குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்பட்டது. பிகார் சட்டப்பேரவையில் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், பட்டியலின, பழங்குடியினர் குடும்பங்களில் 42 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏழைகளாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களில் 33 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஏழைகள் என்றும் அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், சாதிவாரி மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்த பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் முடிவு எடுத்துள்ளார். அதன்படி, பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான இட ஒதுக்கீடு வரம்பை 65 சதவிகிதமாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


உயர்த்தப்படும் இட ஒதுக்கீடு வரம்பு: 


புதிய நடைமுறையின்படி, பட்டியல் சமூக மக்களுக்கு 20 சதவிகிதமும் பிற்படுத்துப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு 43 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பழங்குடி மக்களுக்கு 2 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே, பொருளாதார ரீதியாக நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. புதிய நடைமுறை அமலுக்கு வரும் பட்சத்தில், இட ஒதுக்கீடு வரம்பு, 75 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளது.


சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான முழு விவரங்கள் பிகார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், யாதவ சமூகத்தவரின் மக்கள் தொகையும் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையும் உயர்த்தி காட்டப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு, பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.


மொத்த மக்கள் தொகையில், 42.93 சதவிகிதம் பட்டியல் சாதி மக்கள், 42.70 சதவிகித பழங்குடியின மக்கள் வறுமையில் வாடுவதாக சாதிவாரி கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல, 33.16 சதவிகித பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் 33.58 சதவகித மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் வறுமையில் வாடுகின்றனர். மற்ற சாதிகளில், 23.72 சதவகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 25.09 சதவிகித பொது பிரிவினர், வறுமையில் வாடுவதாக கூறப்பட்டுள்ளது.


அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டிருப்பது தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் படிக்க: Supreme Court: “ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை மறந்துவிடக்கூடாது” - உச்சநீதிமன்ற நீதிபதிகள்