பெங்களூருவின் மகதி சாலையில் 55 வயது நபரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இளைஞர் ஒருவர் பைக்கில் இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பைக்கில் இழுத்துச் செல்லப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, சாஹில் என்பவர் 25 வயது இளைஞர். நயந்தஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இவர் அருகில் இருந்த மஹிந்திரா பொலிரோ வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதுகுறித்து வாகன ஓட்டுநரான 55 வயது முத்தப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்து தப்பிக்க சாஹில் முயற்சி செய்தார். இதுபற்றி முத்தப்பா கூறும்போது, ''சாஹில் போனில் பேசிக் கொண்டிருந்தார். அவர் மன்னிப்பு  கேட்டிருந்தால் கூட அவரைப்போக விட்டிருப்பேன். அவர் தப்பிக்க முயற்சித்ததால், பைக்கைப் பிடித்துக் கொண்டேன். அதனால் அவர் என்னை (முத்தப்பாவை) பைக்கில் இழுத்துச் சென்றார்’’ என்று தெரிவித்தார்.  






இதையடுத்து முத்தப்பா, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், சாஹில் கோவிந்தராஜ நகர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை பெங்களூரு மேற்கு டிசிபி தெரிவித்துள்ளார்.


நடந்த சம்பவம் பற்றி, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


ஷாக்கிங் வீடியோ


அதேபோல அண்மையில் பிஹார் மாநிலம் கயாவில், காயமடைந்த நாயை மோட்டார் சைக்கிளில் பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற வாலிபர் ஒருவரை, சிலர் தடுத்து நிறுத்திய அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. 


வீடியோ பகிர்வு


இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தை மற்றொரு உள்ளூர்வாசி படம் பிடித்தார், அவர் அந்த வாலிபரை நிறுத்தியது மட்டுமல்லாமல், அந்த நபர் செய்த கொடுமையை எதிர்த்து கேள்வியும் கேட்டுள்ளார். அந்த வீடியோவில், நடுத்தர வயதுடைய ஒருவர் நாயை சங்கிலியில் கட்டி வைத்திருப்பதையும், மறுமுனை அவரது பைக்கில் கட்டப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. 


இதுபோன்ற சம்பவம் இணையத்தில் வைரலாவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, இதேபோன்ற ஒரு வீடியோ தலைப்புச் செய்தியில் வந்தது, அதில் ஒரு நபர் ஒரு நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் செல்வதைக் காண்பித்தது. சமீபத்தில் கூட ஒரு நபரை, தனது வண்டியை இடித்ததற்காக வண்டியில் பின்னால் கட்டி இழுத்து சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.