கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ தேவி கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில் ஆண்கள் அனைவரும் பெண்கள் போல் வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


உலகிலேயே ஆண்கள், பெண் போல் வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் ஒரே திருவிழாவாக அறியப்படுகிறது சமயவிளக்குத் திருவிழா (Chamayavilakku festival).


இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கொல்லம் மாவட்டத்தில் இந்தத் திருவிழா மக்கள் பங்கேற்க வெகு விமரிசையாக நடந்துள்ளது. 2020, 2021 ஆண்டுகளில் கேரளாவில் தலைவிரித்தாடிய கொரோனாவால் இந்த விழா கோயில் அளவில் மக்கள் பங்களிப்பு இல்லாமல் நடந்தது.


இந்நிலையில் இந்த ஆண்டு இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கொரோனா காலத்திற்கு முன்னர் கலந்து கொள்ளும் கூட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டும் கூட்டம் சற்று குறைவு தான் எனக் கூறுகின்றனர் வழக்கமாக இந்த விளக்குத் திருவிழாவுக்காக கோயிலுக்கு வருபவர்கள். கொரோனாவுக்கு முன்னர் இந்தத் திருவிழாவில் 4000 பக்தர்கள் கலந்து கொள்வார்களாம். இருப்பினும் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர் என்றே கூற வேண்டும்.


பெண்களாக ஜொலிக்கும் ஆண்கள்.. இந்த விழாவுக்கு வரும் ஆண்கள் பாவாடை தாவணி, சேலை, கசவு சேலை, சுரிதார் என பெண் ஆடைகளில் மிளிர்வர். அழகான அணிகலன்களில் அணிவகுப்பர். இவர்களுக்கு மேக்கப் செய்வதற்காகவே கோயில் வாயிலில் மேக்கப் கலைஞர்கள் அணிவகுத்திருப்பர். அங்கிருந்தே திருவிழா தொடங்கிவிடும்.  அழகாக தயாரான பின்னர் கைகளில் சமயவிளக்கை ஏந்துகின்றனர். இதில் 5 திரிகள் இட்டு தீபம் ஏற்றுகின்றனர். பின்னர் ஊர்வலமாகச் செல்கின்றனர். இவ்வாறாக பெண் போல் வேடமிட்டு விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்துவது வேலையிலும், தொழிலிலும் வளத்தைச் சேர்க்கும் என நம்புகின்றனர். இது தான் இத்திருவிழாவில் சிறப்பு.




வரலாறு என்ன?


பழங்காலத்தில் இப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் ஒரு கல்லில் தேங்காயை உடைத்துள்ளனர். அந்தக் கல்லில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. பயந்து போய் ஊர்க்காரர்களிடம் அவர்கள் சொல்ல ஊரார் உள்ளூர் ஜோசியரை அணுகியுள்ளனர். அவரோ அந்தக் கல் வனதுர்கா என்றும் அதற்கு பூஜைகள் செய்து கோயில் எழுப்பி வணங்க வேண்டும் என்று சொல்லியுள்ளனர்.




அதன்பிறகு அங்கு கோயில் எழுப்பப்பட்டது. ஆரம்பத்தில் நான்கு மூங்கில் கம்பு, இலைகளைக் கொண்டு கூரை வேய்ந்து கோயில் கட்டினர். பின்னர் அது பெரிய கோயில் ஆகியுள்ளது. ஆரம்பத்தில் பெண் பிள்ளைகள் மட்டுமே அங்கே பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது முதன் முதலில் வனதுர்கா கல்லைக் கண்டறிந்த மாடு மேய்க்கும் சிறுவர்கள் தாங்கள் பெண் போல் வேடமணிந்து அந்தக் கோயிலுக்குச் சென்று வந்துள்ளனர். இப்படித்தான் இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் சமயவிளக்குப் பூஜை நடைமுறைக்கு வந்துள்ளது.