ஆந்திரா மாநிலத்தில் புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. இதில், நடிகை ரோஜாவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட உள்ளது.


ஆந்திராவில், 2019 ஆம் ஆண்டு முதல், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்  என்று  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது. அப்படியிருக்க, தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 அமைச்சர்கள், சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக, புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர். 


அமராவதிக்கு அருகில் உள்ள வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று காலை பதவி ஏற்பு விழா நடக்கிறது.




 இது தொடர்பாக, ஆந்திர அரசு ஆலோசகர் சஜ்ஜல ராமகிருஷ்ணா ரெட்டி கூறியதாவது:


புதிய அமைச்சரவையில் உறுப்பினர்களின் இறுதி பட்டியல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். புதிய அமைச்சர்கள், அவர்களின் இலாகா குறித்த விவரங்களும் தெரியவரும்” என்றார்.


அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் 10 பேருக்கு  மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆந்திராவில் இருந்த 13 மாவட்டங்கள், சமீபத்தில் 26 ஆக பிரிக்கப்பட்டன. 2024 சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து, மாவட்டம்தோறும் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதற்கிடையே, புதிய அமைச்சர்கள் பட்டியலில், நகரி தொகுதி எம்.எல்.ஏ.,வும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபலமான நடிகையுமான ரோஜாவின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. இன்று காலை 11.30 மணி அளவில் ரோஜா உட்பட 24 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர்.


ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபோதே, ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் ரோஜா அதிருப்தியில் இருந்தார். ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்தமுறை, ரோஜா அமைச்சரவையில் இடம் பெறுகிறார் என்ற மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். வெகுநாட்களாக எதிர்பார்க்கபட்ட அமைச்சரவை பொறுப்பு ரோஜாவுக்கு கிடைத்துவிட்டது. இன்று, ஆந்திர அமைச்சராக பதவி ஏற்கிறார் ரோஜா.


ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவை 2.0-இல் புதிய அமைச்சர்கள் பி. ராஜண்ண டோரா, தர்மனா பிரசாத ராவ் , குடிவாடா அமர்நாத், புட்டி முத்தால நாயுடு ,தாடிஷெட்டி ராஜா , கருமுரி நாகேஸ்வரராவ் , கோட்டு சத்தியநாராயணா, ஜோகி ரமேஷ் , அம்பதி ராம்பாபு , மேருகா நாகார்ஜுனா , விடதாலா ரஜினி, கக்கனி கோவர்தன் ரெட்டி , ரோஜா கே. செல்வமணி மற்றும் உஷா ஸ்ரீசரண் ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர்.


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண