இஸ்லாமியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் வலதுசாரி சிந்தனை கொண்ட சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதை தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என இந்து மத குரு யட்டி நரசிம்மானந்த் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். 


அஸ்ஸாம் எம்.பி.


இந்நிலையில், அஸ்ஸாமின் முக்கிய கட்சிகளில் ஒன்றான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பத்ருதீன் அஜ்மல் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


"இந்துக்கள் முஸ்லீம் ஃபார்முலாவை ஏற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும்" என அவர் கூறி இருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. "இஸ்லாமிய ஆண்கள் 20 முதல் 22 வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். முஸ்லிம் பெண்களும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட 18 வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். 


மறுபுறம், இந்துக்களோ திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு, மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்து கொள்கிறார்கள். அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பணத்தைச் சேமிக்கிறார்கள்.


 






40 வயதிற்குப் பிறகு பெற்றோரின் அழுத்தத்தால் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படியானால், 40 வயதிற்குப் பிறகு குழந்தைகளைப் பெறுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? வளமான நிலத்தில் விதைத்தால் மட்டுமே நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்போதுதான் வளர்ச்சி இருக்கும்.


இள வயதிலே திருமணம்:


அவர்களும் (இந்துக்கள்) முஸ்லிம்களின் ஃபார்முலாவைப் பின்பற்றி தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். அவர்களுக்கு 20-22 வயதில் திருமணம் செய்து வைத்து, 18-20 வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து, பிறகு எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று பாருங்கள்" என பத்ருதீன் அஜ்மல் தெரிவித்துள்ளார்.


ஷ்ரத்தா கொலை வழக்கை 'லவ் ஜிஹாத்'துடன் தொடர்புப்படுத்தி பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு பதில் அளித்த அவர், "இன்று நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் நம் முதலமைச்சர். எனவே, நீங்களும் நான்கைந்து 'லவ் ஜிஹாத்' நடத்தி எங்கள் முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லுங்கள்.


யாரால் அவரை தடுக்க முடியும்? நாங்கள் அதை வரவேற்போம். சண்டையிட மாட்டோம். உங்களுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதும் தெரியவரும்" என்றார்.