The Public Examinations Act:  பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும்) சட்டம், 2024 உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.


பொதுத்தேர்வுகள் சட்டம் 2024:


இது மத்திய ஆட்சேர்ப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டம் என அழைக்கப்படுகிறது.  இதுதொடர்பாக பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, "பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம்,  ஜூன் 21 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் பொது நுழைவுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகளை நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .






 


சட்டம் சொல்வது என்ன?


கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் , மோசடியைத் தடுக்க குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும். திட்டமிடப்பட்ட மோசடி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.


தேர்வு நடத்தும் அதிகாரி, சேவை வழங்குநர் அல்லது வேறு ஏதேனும் நிறுவனம் உட்பட ஒரு நபர் அல்லது நபர்கள் குழு திட்டமிடப்பட்ட குற்றத்தைச் செய்தால், அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் வரை தண்டனை நீட்டிக்கப்படலாம். 1 கோடிக்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும் எனவும் சட்டம் கூறுகிறது. ஒரு திட்டமிடப்பட்ட தாள் கசிவு குற்றத்தில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், ஒரு நிறுவனத்தின் சொத்தை பறிமுதல் செய்வதற்கும்  சட்டத்தில் விதிகள் உள்ளன. மேலும் தேர்வுக்கான விகிதாசார செலவும் அதிலிருந்து வசூலிக்கப்படும்.


தேர்வர்களுக்கு விதிவிலக்கு:


அதேநேரம், இந்தச் சட்டம் தேர்வில் தோன்றும் விண்ணப்பதாரர்களை தண்டனை விதிகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் அவர்கள் தேர்வு நடத்தும் அதிகாரத்தின் தற்போதைய விதிகளின் கீழ் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள்.


வினாத்தாள்கள் அல்லது ஏன்சர் கீ கசிவு, தேர்வின் போது விண்ணப்பதாரர்களுக்கு அங்கீகாரம் இல்லாத தகவல் தொடர்பு அல்லது தீர்வுகளை வழங்குதல், கணினி நெட்வொர்க்குகள் அல்லது ஆதாரங்களை சேதப்படுத்துதல், தேர்வாளர்களை ஆள்மாறாட்டம் செய்தல், போலி தேர்வுகளை நடத்துதல் அல்லது போலி ஆவணங்களை வழங்குதல் மற்றும் தகுதிக்கான ஆவணங்களை சேதப்படுத்துதல் ஆகியவை 'நியாயமற்ற வழிமுறைகள்' என சட்டம் வரையறுக்கிறது. 


சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாதவை. துணை போலீஸ் சூப்பிரண்டு அல்லது உதவி போலீஸ் கமிஷனர் பதவிக்கு குறையாத எந்த அதிகாரியும் சட்டத்தின் கீழ் எந்த குற்றத்தையும் விசாரிக்க முடியும். எந்தவொரு விசாரணையையும் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு அனுப்பும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.


யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வு ஆணையம், ரயில்வே, வங்கி ஆட்சேர்ப்பு தேர்வுகள் மற்றும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் அனைத்து கணினி அடிப்படையிலான தேர்வுகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.