மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜுவை  தொடர்ந்து, அந்த அமைச்சகத்தின் இணை அமைச்சரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இணை அமைச்சரும் மாற்றம்:


மத்திய சட்ட அமைச்சகத்தின் இணை அமைச்சராக இருந்த எஸ்.பி. சிங் பாகல், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகத்தின் இணை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜுவை புவி அறிவியல் அமைச்சராக மாற்றி காலையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை தொடர்ந்து, சில மணி நேரங்களிலேயே சட்ட இணை அமைச்சராக இருந்த எஸ்.பி. சிங் பாகலும் வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவை சேர்ந்த இவர் ஆக்ரா தொகுதியில் இருந்து, மக்களவைக்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்ந்து எடுக்கப்பட்டார். 


காரணம் என்ன?


நீதித்துறையில் தலையிடுவதாக எழுந்த புகாரை அடுத்து சட்டத்துறை அமைச்சர் பதவியில் இருந்து கிரண் ரிஜிஜு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்த வரிசையில் தான், இணையமைச்சராக இருந்த எஸ்.பி. சிங் பாகலும் வேறு இலாக்காவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக்கு பின், மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவை மாற்றத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். 


கிரண் ரிஜிஜு விளக்கம்:


இந்த அமைச்சரவை  மாற்றம் குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூயை ஏபிபி தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அவர், “ வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார். 


சட்டத்துறையில் நேர்ந்த மாற்றங்கள்:


ரவிசங்கர் பிரசாத்திடம் இருந்த சட்டத்துறை கடந்த 2021 ஜூலை மாதம் கிரண் ரிஜிஜூவிடம் வழங்கப்பட்டது. ரிஜிஜூ சட்ட அமைச்சராக இருந்த காலத்தில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதித்துறையுடன் அவருக்கு ஏற்பட்ட மோதல் அடிக்கடி தலைப்பு செய்திகளாக வெடித்தது. தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மீது பல்வேறு விமர்சனங்களை பகிரங்கமாக ரிஜிஜூ முன்வைத்தார். இதன் காரணமாகவே முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் இருந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அரசியல் முக்கியத்துவம்  குறைந்த புவி அறிவியல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என மத்திய அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அர்ஜூன் ராம் மேக்வால்:


தற்போது சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன் ராம் மேக்வால் ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் பாஜகவின் மிகப்பெரிய தலித் முகங்களில் இவரும் ஒருவர். மிகவும் எளிய முகமாக அறியப்படுகிறார். இவரது எளிமையை பிரதிபலிக்கும் விதமாக அடிக்கடி சைக்கிளிலும் வலம் வருவார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இவருக்கு சட்ட அமைச்சகம் போன்ற முக்கிய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது அரசியல் திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.