ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ரூ.2000 நோட்டுகளைப் போல் அல்லாமல் அமுல் எப்போதுமே புழக்கத்தில் இருக்கும் என்று வேடிக்கையாக விளம்பரம் செய்துள்ளது அமுல் நிறுவனம்.


அமுல் (Anand Milk Producers Union Iimited (AMUL)என்பது இந்திய மாநிலமான குஜராத்திலுள்ள ஆனந்த் எனும் ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகும். இதனை நிறுவிய மும்மூர்த்திகள்: திரிபுவன்தாஸ் படேல், வர்கீஸ் குரியன் மற்றும் அரிசந்த் மேகா தலாயா ஆவர்.


`அமுல் பேபி’ என்ற குட்டி பெண் ஓவியத்தை வரைந்து அதன் மூலம் தனது பொருட்களை விளம்பரப்படுத்தி வருகிறது. அமுல் பேபி விளம்பரம் தொடங்கப்பட்டு 57 ஆண்டுகள் ஆகிறது. தனது பொருட்களை மட்டும் விளம்பரப்படுத்தாமல் சமூக அக்கறையுடன் சமூக நலன் சார்ந்த விஷயங்களையும் அரசியல் நிகழ்வுகளையும் அமுல் பேபி ஓவியம் மூலம் கூறிவருகிறது. 


இந்நிலையில் தான் அண்மையில் ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக வெளியிட்ட அறிவிப்பையும் வைத்து விளம்பரம் செய்துள்ளது. அதில் ரூ.2000 நோட்டுகள் போல் இல்லாமல் அமுல் எப்போதும் புழக்கத்தில் இருக்கும் என்று கிண்டலாக சொல்லப்பட்டுள்ளது.


இன்ஸ்டா விளம்பரம்:





;


நாடு முழுவதும் ரூபாய் 2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும், மே 23ஆம் தேதி முதல் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.  


முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு பொதுமக்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியது. அதுபோன்று, இந்த முறை அதிரடி நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல், செப்டம்பர் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம், செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டை கைவசம் வைத்திருந்தால் அதன் நிலை என்ன என்பதை மத்திய அரசு இதுவரை விளக்கவில்லை. 


சாடும் எதிர்க்கட்சிகள்:
2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! 2 ஆயிரம் ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை' என குறிப்பிட்டுள்ளார்.