அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் 16ஆம் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்குகிறது. அதன்படி தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும். பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு,பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தினசரி விமான சேவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு இலங்கை மற்றும் தமிழ்நாட்டு பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 


இந்தியாவில் இருந்து இலங்கை கொழும்பு நகருக்கு மட்டும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருவதால்,  யாழ்ப்பாணம் நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன.


இதையடுத்து அலையன்ஸ் ஏர் நிறுவனம் 2019-ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை துவங்கியது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்ட சமயத்தில் சென்னை- யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவையும் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த பின் மீண்டும் நாடு முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்டன. சென்னை- யாழ்ப்பாணம் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவையை 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதியில் இருந்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் மீண்டும் வாரத்தில் 4 நாட்கள் என விமான சேவையை தொடங்கியது.


தற்போது, திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் இந்த விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான சேவைக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது. சுற்றுலா பயணிகளும் இந்த விமானத்தில் அதிக அளவில் யாழ்ப்பாணம் சென்று வருகின்றனர். இதனால் யாழ்ப்பாணம் விமான சேவையை தினசரி விமானமாக சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16-ந்தேதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.