நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டிசம்பர் 13-ஆம் தேதி கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கம்போல் அவை இயங்கி வந்ததது. இந்நிலையில் அன்று மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து  2 பேர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கீழே குதித்து, கண்ணீர் புகை வீசும் குப்பிகளை வீசினர். அதனை தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடு காரணமாகத்தான் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு செவி காய்க்கவில்லை என்பதால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டனர். இதனால் டிசம்பர் 14 ஆம் தேதி 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து 76 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.






நேற்று முன் தினம், வரலாற்றில் இல்லாத வகையில் மொத்தமாக இரு அவைகளில் இருந்தும் 90க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல் நேற்று கேரளாவை சேர்ந்த இரண்டு எம்.பிக்கள் கூடுதலாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். மொத்தமாக 143 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் இன்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, விஜய் சௌக் முதல் நாடாளுமன்றம் வரை கையில் பதாகைகள் ஏந்திய வண்ணம் பேரணியில் ஈடுபட்டனர்.






இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,” பிரதமர் மோடி நாட்டில் இருக்கும் எல்லா இடத்திலும் பேசுகிறார். ஆனால் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக இதுவரை பிரதமர் மோடி பேசவில்லை. பாதுகாப்பு குறைபாடு என்பது மிக முக்கியமான விஷயம் என்பதால் இதற்கு முன்னுரிமை கொடுத்து இந்த விஷயம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.






அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், “ எங்களுக்கு தேவையானது எல்லாம் ஒன்றே ஒன்று தான். டிசம்பர் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.