ஏர் இந்திய விமான நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா சன்ஸ் குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது. 1932 இல் டாட்டா எயர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.

  


1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்த நிறுவனம். தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், இரண்டாவமு இடத்தைப் பிடித்தன. இந்த நிலையில் நிறுவனம் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்திலும். ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடனிலும் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை இந்திய ஒன்றிய அரசு எடுத்துள்ளது. 


ஏர் இந்தியா விற்பனை: 


கடந்த 2017ம் ஆண்டு,  ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் நிதி திருப்புமுனையை அடைவதற்கான திருப்புமுனை திட்டம் / நிதி மறுசீரமைப்பு திட்டத்த்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத்திட்டத்தின்படி  2021 ஆம் ஆண்டு வரை ரூ. 30,231 கோடி  பங்கு மூலதனத்தை (சில இலக்குகளை அடையும் நிபந்தனைக்கு உட்பட்டு) பெற வகை செய்யப்பட்டது. திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசின் ஒட்டுமொத்த ஆதரவுடன் ஏர்இந்தியா நிறுவனம் செலவினங்களையும், நஷ்டங்களையும் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும், ஏர் இந்தியாவின் நஷ்டங்கள்  கட்டுக்குள் கொண்டு வரப்படவைல்லை. 


இதனைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க    மத்திய அரசு முன்வந்தது.       


அதன் தொடர்ச்சியாக, கடந்த 2018ம் ஆண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 49% வரை முதலீடு செய்ய அனுமதிக்க முடிவு செய்யப் பட்டது.  இருந்தாலும், ஏர் இந்தியாவின் கணிசமான முதலாளி நிலை மற்றும் செயல்பாட்டு கட்டுப்பாடு இந்திய தேசத்தைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  


கடந்த 2020ம் ஆண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100 சதவீதம் வரை முன்அனுமதிப் பெறாமல் முதலீடு செய்ய  அனுமதிக்கும் வகையில், தற்போதுள்ள வெளிநாட்டு முதலீடு அனுமதிக் கொள்கையில் மத்திய அமைச்சரவை திருத்தம் செய்தது.