வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் நேற்று வட கிழக்கு பருவமழை தொடங்கியது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அதாவது 19 ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது, பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மாறியது.






இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த புயலுக்கு தேஜ் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது இந்த புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று தென்மேற்கு திசையை நோக்கி நகர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று காலை நிலவரப்படி ஏமன் (யேமன்) நாட்டின் சொகோட்ராவில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும் ஓமனின் சலாலாவின் தெற்கு- தென்கிழக்கில் 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவே வலுவிழக்கும் என்றும் ஏமனின் அல் கைதா மற்றும் ஓமனின் சலாலா இடையே அக்டோபர் 24  ஆம்  தேதி மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






இதேபோல் வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஹாமூன் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த  3 நாட்களுக்கு வடக்கு – வடகிழக்கு திசையில் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் நோக்கி நகரக்கூடும். தற்போது பாரதீப்பில் இருந்து 400 கிமீ தொலைவில் (ஒடிஷா), திகாவில் இருந்து (மேற்கு வங்கம்) தென்மேற்கே 550 கிமீ தொலைவிலும், கேப்புப்பாராவில் (வங்கதேசம்) 690 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 


இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  இதனால் மீனவர்கள் 26 ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் வானிலை மையம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. ஆனால் இந்த இரண்டு புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்காது என்று வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.