Accident: குஜராத் மாநிலத்தில் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


குஜராத் மாநிலம்  வதோதரா நகரின் புறநகரில் அகமதாபாத்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சாலையில் எதிரே ஒரு லாரி ஒன்று வந்தது. இந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 4 மணியளவில் சொகுசு பேருந்து  மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இந்த சொகுசு பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராஜஸ்தானில் இருந்து சூரத் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும்  4 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


இதேபோன்று சமீபத்தில் கேரளாவில் ஒரு கோர விபத்து ஒன்று நடைபெற்றது. கேரளாவின் வடக்கஞ்சேரி பகுதியில் அரசுப் பேருந்தும்- சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் உள்பட 42 பள்ளிக் குழந்தைகள் மற்றும் 5 ஆசிரியர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஊட்டிக்கு சென்றது. அப்போது வடக்கஞ்சேரியிலிருந்து வாலையாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அந்த தனியார் பேருந்து அரசு பேருந்து உடன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 5 பள்ளிக் குழந்தைகள் உட்பட 9 பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 24 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் விபத்து குறித்து சில தகவல்கள் கூறப்பட்டது. இந்த விபத்துக்கு சுற்றுலா பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் அலட்சியப் போக்கே காரணம் என்பதுபோல இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி மிகவும் வைரலானது. அதில் பேருந்தை இயக்கி வந்த டிரைவர், பேருந்து வேகமாக சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இருக்கையை விட்டு எழுந்து நடனமாடுகிறார் என்பது வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணைக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், குறிப்பாக தென் இந்தியாவைப் பொறுத்த வரையில் தமிழ்நாடு சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலங்களில் முதல் இடத்தில்  உள்ளது. அதனை அடுத்த இடத்தில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேராளா அந்த வரிசையில் உள்ளன. சாலைகளில் பயணிக்கும் போது சாலை விதிகளை முறையாக பின் பற்றினாலே விபத்துகள் ஏற்படாது என அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும்,   சாலைகளின் தரம் என்பது மிகவும் மோசமாக இருப்பதை யாரும் பேசுவதோ, அரசிடம் முன் வைப்பதோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.