தங்களின் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால், பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்போம் என முக்கியத்துவம் வாய்ந்த தேசிய கட்சி ஒன்று அறிவித்துள்ளது. அது என்ன கட்சி, அவர்களின் கோரிக்கை என்ன என்பதை கீழே காண்போம்.


பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி:


கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பாஜக அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.


தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்தது. 


அதற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், வெற்றிபெற்றது. பலம் படைத்த பாஜகவை வீழ்த்த பல்வேறு கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தந்தது. 


இதனிடையே, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், பிகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில், 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.


அதிர்ச்சி கொடுக்கும் தேசிய கட்சி:


தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், டெல்லி அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிரான தங்களின் நிலைபாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் பாட்னா கூட்டத்தை புறக்கணிப்போம் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.


ஆம் ஆத்மி கட்சியின் இந்த நடவடிக்கை, பிளவுப்பட்டு கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், "டெல்லி அவசரச் சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் எங்களை ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சி கூட்டத்தை புறக்கணிப்போம். எதிர்கட்சி கூட்டங்களில் இருந்து விலகி இருப்போம்" என்றார்.


டெல்லி அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க, நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்ற வேண்டும். மக்களவையில் சட்டத்தை நிறைவேற்ற பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்தாலும், மாநிலங்களவையில் மற்ற கட்சிகளை நம்பி உள்ளது பாஜக.


எனவே, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க விடாமல் தடுக்க ஆம் ஆத்மி முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர் உள்ளிட்டோரை அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் சந்தித்து பேசியிருந்தார்.