ஆதார் விவரங்களை பயனாளர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணமின்றி அப்டேட் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


ஆதார் அட்டை: 


மத்திய அரசு வழங்கும் தனிமனித அடையாள அட்டை, தற்போது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாததாக மாறியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும், ஆதார் அடிப்படையிலேயே செயல்படுத்தப்படுகிறது. தனிநபரின் கருவிழி மற்றும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு, அதன் விவரங்களுடன் வழங்கப்படும் ஆதார் அட்டையை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம், மோசடிகள் தவிர்க்கப்படும் என நம்பப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள சுயவிவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை திருத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. 


கட்டண விவரம்:


ஆதார் பயனாளர்கள் தங்களது சுயவிவரங்களை ஆதார் போர்டலில் டிஜிட்டல் முறையிலோ அல்லது ஆதார் மையங்களுக்கு நேரடியாக சென்றோ திருத்திக் கொள்ளலாம். அவ்வாறு செய்யப்படும் திருத்தங்களுக்கு பயனாளர்கள் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.


இலவசமாக விவரங்களை அப்டேட் செய்யும் வசதி:


இந்நிலையில், myAadhaar போர்டலுக்கு சென்று சுயவிவரங்களில் திருத்தம் செய்ய அடுத்த 3 மாதங்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த சலுகை மார்ச் 15ம் தேதி முதல் ஜுன் 14ம் தேதி வரையில் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று திருத்தம் மேற்கொண்டால் 50 ரூபாய் எனும் பழைய கட்டணம் வசூலிக்கும் முறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


எப்போது திருத்தங்கள் தேவைப்படும்? 


தனிமனித விவரங்களில் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், பயனாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள மையங்களுக்குச் செல்லலாம் அல்லது டிஜிட்டல் வழிகளைத் தேர்வு செய்து திருத்தங்களை செய்யலாம்.  இது வரும் மூன்று மாதங்களுக்கு இலவசமாக இயங்கும்  என UIDAI தெரிவித்துள்ளது.


டிஜிட்டலில் புதுப்பிப்பது எப்படி?


ஆதார் விவரங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்க, பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ இல் உள்நுழையலாம். அப்போது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP பகிரப்படும். அதன்மூலம் உள்ளே செல்லலாம். தொடர்ந்து, ஆவண புதுப்பிப்பு' ஐகானைத் தேர்ந்தெடுக்க வேண்டும். “ ஆதார் வைத்திருப்பவர் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும், சரியாகக் கண்டறியப்பட்டால், அடுத்த ஹைப்பர்-லிங்கைக் கிளிக் செய்யவும். அடுத்த திரையில், குடிமகன் கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து அடையாளச் சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்று (PoA) ஆவணங்களைத் தேர்வு செய்து, ஆவணங்களைப் புதுப்பிக்க அதன் நகல்களைப் பதிவேற்ற வேண்டும். புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய PoA மற்றும் PoI ஆவணங்களின் பட்டியல் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். ஆதார் அட்டை விநியோகம் செய்யப்பட்ட ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, பயனாளர்கள் தங்களது விவரங்களை அப்டேட் செய்ய வேண்டியது அவசியமாகும்.