ஈரான் போர் காரணமாக உலக முழுவதும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல் , டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவில் கூட பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்துவிட்டது இருந்தாலும் 100% பழைய நிலைமை திரும்பவில்லை.

Continues below advertisement

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றாலும் விரைவில் டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை விட, டீசல் மற்றும் பிற எரிபொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஹார்முஸ் ஜலசந்தி தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கே 100% விநியோகம் தடைபட்டுள்ளது. அதே வேளையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் காரணமாக ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

Continues below advertisement

ஈரான் போர் காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள ஜசான் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது டீசல் உற்பத்தியை வெகுவாக குறைத்துள்ளது.இதனால் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யா தனது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கில், 2027ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வரை இவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. ஏற்கனவே உலக சந்தையில் பற்றாக்குறை நிலவும் சூழலில், டீசல் கிடைப்பதை இது மேலும் கடினமாக்கியுள்ளது.

அமெரிக்கா போன்ற பெரிய பொருளாதார நாடுகளில், டீசல் மற்றும் அது சார்ந்த எரிபொருட்களின் கையிருப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக குறைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றங்கள் மற்றும் விவசாய பணிகளுக்கான தேவை அதிகரித்துள்ள சூழலில், டீசல் கையிருப்பு குறைவாக இருப்பது விலையை மேலும் உயர்த்தியுள்ளது.

பல்வேறு நாடுகளிலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதம், பணிகள் நிறுத்தம் மற்றும் கப்பல் போக்குவரத்து சிக்கல்கள் போன்றவை டீசல் வர்த்தகத்தில் பெரும் தடைகளை உருவாக்கியுள்ளன. இதனால் உலக சந்தையில் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் டீசல் விலை குறையாது என்றே சொல்லப்படுகிறது. இந்தியாவில் இதுவரை எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை. இருந்தாலும் உலகளாவிய நெருக்கடி இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

டீசல் விலை உயர்வு என்பது வெறும் எரிபொருள் விலையோடு நின்றுவிடாது. இந்தியாவில் அரசு பேருந்துகள், லாரிகள், கார்களில் டீசல் தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே டீசல் விலை உயர்ந்தால் சரக்கு போக்குவரத்து செலவு உயரும். இதனால் பல்வேறு பொருட்களின் விலை உயரும். ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவிக்கும் இந்திய மக்களுக்கு டீசல் விலை உயர்வு பெரும் சிக்கலை தான் தரும். இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல், 107.78 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 99.56 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.