நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று கொண்டாடப்பட்டது.முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. பிறகு சுதந்திரதினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடந்தது.விமானப்படையின் வான்வெளி சாகசங்களை புன்னகையுடன் கண்டுகளித்தார் பிரதமர் மோடி. நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று நாடு திரும்பிய வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.



கொடியேற்றி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,’ஜனநாயகத்தை நேசிப்பவர்களுக்கும் தேசத்தை நேசிப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.தேசப் பாதுகாப்பில் இரவு பகலாகத் தம்மை ஈடுபடுத்திவரும் வீரர் வீராங்கனைகளுக்கு இன்று தேசம் தலைவணங்குகிறது. பிஸ்மில், நேதாஜி, ஜான்சி ராணி லட்சுமி பாய், சித்தூர் சென்னம்மா,நாட்டின் முதல் பிரதமர்  நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், அம்பேத்கர் என ஒவ்வொருவரையும் தேசம் இன்று நினைவுகூர்கிறது.தேசத்தைப் பாதுகாத்துக்கொண்டிருப்பவர்களை நினைவுகூற வேண்டிய தருணம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தடுப்பூசிகளை உருவாக்கியவர்கள் -இந்த காலகட்டத்தில் மற்றவர்களுக்கு சேவை செய்ய ஒவ்வொரு கணத்தையும் அர்ப்பணித்தவர்கள் நமது பாராட்டுக்குரியவர்கள். டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்மைப் பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். இன்று அவர்களின் சாதனையை பாராட்டும்படி நான் தேசத்தை கேட்டுக்கொள்கிறேன்(பிரதாம்ர் உட்பட ஒட்டுமொத்த அரங்கமும் கரவொலி எழுப்புகிறது).அவர்கள் நம் இதயங்களை வென்றது மட்டுமல்லாமல் எதிர்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியுள்ளனர். இந்த தருணத்தில் நாம் பிரிவினையை நினைவுகூற வேண்டும். பிரிவினையின் வலிகளை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. நேற்றைய தினம் ஆகஸ்ட் 14ம் தேதியை பிரிவினை நினைவு தினமாக (Partition Horror remembrance day) அனுசரிக்க அரசு ஒரு உணர்ச்சிபூர்வமான முடிவை எடுத்தது. முன்னேற்றப் பாதையில் வளர்ந்து வரும் நமது நாட்டின் முன்னால், இந்த முழு மனித இனத்தின் முன்னால், கொரோனா ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்திய மக்கள் கட்டுப்பாடு மற்றும் பொறுமையுடன் இந்த போரை சந்தித்துள்ளனர். நமது விஞ்ஞானிகளால், உள்நாட்டிலேயே  மேக் இன் இந்தியாவின் கீழ் இரண்டு கோவிட் தடுப்பூசிகளை உருவாக்க முடிந்தது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நாம் மேற்கொண்டது பெருமிதம் மிக்க விஷயம். நமது அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும் கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாம் பலரை இழந்தோம். இந்தத் தாங்க முடியாத வலி எப்போதும் நம்முடன் இருக்கும். இந்தியாவின் 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நமது இலக்குகளை அடைவதை உறுதி செய்ய வேண்டும். நம்முடைய குறிக்கோள், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், 'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்(Minimum government, maximum governance)' என்ற மந்திரத்துடன் முன்னேற வேண்டும்.






இந்தியாவின் 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, ​​'தன்னிறைவான இந்தியா' என்கிற நமது இலக்கை அடைவதை உறுதி செய்ய வேண்டும். மாறிவரும் காலங்களில் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். இதில் அனைவரின் பங்களிப்பும் முக்கியமானது. ஆயுஷ்மான் பாரத், உஜ்வாலா யோஜ்னா, ஓய்வூதிய திட்டம், ஆவாஸ் யோஜ்னா போன்ற திட்டங்களுடன் நமது குடிமக்களை 100 சதவிகிதம் இணைக்க வேண்டும். இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல, இந்த அரசு ஓபிசி மசோதாவை நிறைவேற்றியது. இது நமது நாட்டின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை வழங்கும்.


நமது வடகிழக்கின் திறனை வெளிக்கொணர்ந்து, நமது தேசத்தின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். அரசாங்கம் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஜம்மு -காஷ்மீரில் எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் எதிர்காலத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தங்கள் அங்கே நடந்து வருகின்றன. 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் திறன்களை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கு நமது திறனை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம். இதற்காக, நாம் நாட்டின் பின்தங்கியிருக்கும் பகுதிகளின், பின்தங்கிய பகுதிகளின் கரங்களைப் பற்றிக்கொள்ள வேண்டும். மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பொதுப் பிரிவினரின் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வது அவசியம். சமீபத்தில் மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், ஓபிசியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாநிலங்களுக்கு சொந்தமாக ஓபிசி பட்டியலை உருவாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது’ இவ்வாறு பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.