ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசு மற்றும் ஆளுநரின் கருத்து கேட்கப்படவில்லை. பேரறிவாளன் விடுதலை செய்யபப்ட்ட அடிப்படையிலே 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 


சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே  21ம் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம்  தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ன்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது. கடந்த 2000ஆம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.


உச்சநீதிமன்றத்தால் 2014ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பின்னர் தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.


அதேநேரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 தமிழரை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு முடிவெடுத்தது. தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது.


பேரறிவாளவன் தம்மை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அமைச்சரவை தீர்மானம் முக்கியமானதாக இருந்தது. தொடர்ந்து, தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சார்பில் 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிசந்திரன், ஹரிகரன் ஆகியோர் தங்களை சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ள நிலையில், ஒன்றிய அரசுக்கும் பதிலளிக்க நோட்டீஸ்  அனுப்பப்பட்டிருந்தது.


நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை நவ. 11ம் தேதிக்கு (இன்று) உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், ஹரிகரன் ஆகியோர் தங்களை சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.


இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளித்தனர். அதில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்டட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி நளினி உட்பட ஆறுபேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.


நளினி தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறுகையில் ”பேரறிவாளனை எதன் அடிப்படையில் விடுதலை செய்தார்களோ அதே அடிப்படையில் தான் தற்போது இந்த ஆறு பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.  இந்த விடுதலை தொடர்பாக தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் ராகேஷ்  திவேதியிடம் கேட்கும்பொழுது எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட அடிப்படையிலேயே இவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார். சட்டரீதியாக பேரறிவாளனின் விடுதலை பற்றி முடிவு எடுத்த நிலையில் இந்த வழக்கில் தமிழக ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டது தவறு என்று தீர்ப்பு வந்தவுடன் ஆறு பேரின் விடுதலை பற்றி உறுதியான நிலைப்பாடு ஏற்பட்டது.


மத்திய அரசு தரப்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜர் ஆகாததால் மத்திய அரசின் கருத்து கேட்காமலே இந்த வழக்கின் முடிவானது வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பின் போது மத்திய அரசு மற்றும் ஆளுநரின் கருத்து கேட்கப்படவில்லை. தமிழக அரசு தரப்பில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானமானது யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் நிரூபித்துள்ளது. அரசும் நீதிமன்றமும் தொடர்ந்து ஆளுநருக்கு படிப்பினை புகட்டி வருகிறது அதில் இந்த வழக்கின் முடிவும் ஒன்று.


மாநில அரசு 2014 ஆம் ஆண்டிலேயே இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கூறியிருந்த நிலையில் 8 ஆண்டுகள் தாமதமாக இந்த தீர்ப்பு வந்ததே அவர்களுக்கு பெரும் மனவேதனை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களது எண்ணமாக இருந்தது.தமிழக அரசு அறிவித்தவுடன் இன்று இரவு அல்லது நாளை காலை அனைத்து ஃபார்மாலிட்டி செய்து முடித்தவுடன் ஆறு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள்” என அவர் தெரிவித்தார்.