Rajasthan School Building Collapse: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அரசுப் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து:

மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசுப் பள்ளியில் காலை சுமார் 8.30 மணியளவில் இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது. விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோக இடிபாடுகளில் மாணவர்கள் உள்ளிட்ட மேலும் 30 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

மீட்பு பணிகள் தீவிரம்:

ஒற்றை மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  பலத்த சக்கதம் கேட்டதும் அங்கு ஓடிவந்த உள்ளூர் வாசிகள் உடனடியாக இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியை தொடர்ந்து. இதையடுத்து தகவலறிந்து மீட்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் நிவாரணக் குழுக்களின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கூறப்படுகிறது. 4 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு இடிபாடுகளை அகற்றி காயமடைந்துள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க செய்துள்ளது.

கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், இது தொடர்பாக முன்னர் பல புகார்கள் எழுந்ததாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு:

விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு பள்ளி இருக்கும் பகுதிக்கு விரைந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் அங்கு குவிந்த்துள்ளனர். அரசுப் பள்ளிகள் தான் பெருமிதம் என கூறிக்கொள்ளும் அரசியல் வாதிகள், அங்கு மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது எப்போது என அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புகார் அளித்தபோதே நடவடிக்கை எடுத்து இருந்தால், சின்னஞ்சிறு மாணவர்கள் இன்று உயிரிழந்தமாட்டார்கள் என்றும் அலறி துடித்தனர்.

அமைச்சர் உறுதி:

விபத்து குறித்து பேசிய மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், “காயமடைந்த குழந்தைகளுக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும், சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு எந்தவிதமான சிரமங்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் மாவட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிய உத்தரவிட்டுள்ளேன். மேலும், நிலைமையை ஆராய்ந்து, முடிந்த அளவு உதவுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.