கேரளாவில் கல்லூரி மாணவி ஒருவர் நாய் கடித்து வெறிநாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியில் வசித்து வந்த 18 வயதான ஸ்ரீலட்சுமி கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் இளங்கலை (பிசிஏ) முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மே 30ஆம் தேதி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது ஸ்ரீலட்சுமியை அவர் தங்கிருந்த நாய் ஒன்று கடித்தது. 


முதலில், ரேபிஸ் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட ஸ்ரீலட்சுமிக்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தென்படவில்லை. பின்னர் அவர் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினார். அதன் பிறகு அவர் முதலில் பாலக்காட்டில் உள்ள மங்காராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலால் திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ரேபிஸ் நோய்க்கான அனைத்து அறிகுறிகளும் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சையைத் தொடங்கியதாகவும் மருத்துவமனை கூறியது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தபோதும் ஸ்ரீலட்சுமி ஜூன் 30ஆம் தேதி உயிரிழந்தார்.


இதேபோல், கடந்த மே 29 ஆம் தேதி அந்த நாய் அதன் உரிமையாளரைக் கடித்துள்ளது. ஒரு நாள் கழித்து, ஸ்ரீலட்சுமியைக் கடித்தது. ஆனால் உரிமையாளரின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், சுகாதாரத்துறை இயக்குனரிடம் அறிக்கை கேட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரிக்க பாலக்காடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி தலைமையில் குழுவும் அமைக்கப்படும் என்றார்.


“இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஸ்ரீலட்சுமி நான்கு ரேபிஸ் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டார். சிகிச்சை எடுத்துகொண்ட பிறகும் இறந்துவிட்டார்,” என்று உறவினர் சந்தீப் கூறினார். மேலும், அந்த நாய் அதன் உரிமையாளர் உட்பட மற்ற நபர்களை கடித்ததால் குடும்பத்தினரும், குடியிருப்பாளர்களும் வேதனையிலும் பீதியிலும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


ரேபிஸ் என்றால் என்ன?



உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, "ரேபிஸ் என்பது ஒரு வைரஸ் ஜூனோடிக் நோயாகும், இது மூளை மற்றும் முதுகுத் தண்டுகளில் முற்போக்கான மற்றும் ஆபத்தான வீக்கத்தை ஏற்படுத்துகிறது." இது இரண்டு மருத்துவ வடிவங்களைக் கொண்டுள்ளது: ஃபியூரியஸ் ரேபிஸ், இது அதிவேகத்தன்மை மற்றும் மாயத்தோற்றங்களால் வகைப்படுத்தப்படுகிறது; மற்றும் முடக்குவாத வெறிநாய்க்கடி, பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பக்கவாதம் மற்றும் கோமா ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. நோயை உண்டாக்கும் வைரஸ் லிசாவைரஸ் இனத்தைச் சேர்ந்தது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண