பெண்களுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் தனக்கு அநீதி இழைத்த நபரின் தாயை 16 வயது சிறுமி துப்பக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுமி:


டெல்லியின் பஜன்புரா பகுதியில் கோண்டா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 50 வயது  பெண் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல் தனது கடையில் இருந்த அந்த பெண்ணை நோக்கி, வந்த 16 வயதே ஆன சிறுமி திடீரென தான் மறைத்து வைத்து இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். அதில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரள்வதற்குள், அந்த சிறுமி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.


மருத்துவமனையில் அனுமதி:


இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்து, காயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவத்தை பார்த்த அங்கிருந்த நபர்கள், குறிப்பிட்ட சிறுமி தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் போது தான், அவர் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது உறுதியாகியுள்ளது.


காரணம் என்ன?


அதன்படி, துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுமி கடந்த 2021ம் ஆண்டு காயமடைந்த பெண்ணின் மகனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், 25 வயதான அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான், அந்த இளைஞரின் தாயாரை சம்பவம் நடந்த 2 ஆண்டுகளுக்குப் பின், 16 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.


சிறுமியிடம் தீவிர விசாரணை:


இதையடுத்து சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறுமியை பிடித்த போலீசார், அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தன்னிடம் அத்துமீறிய நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சிறுமி ஏன் இளைஞரின் தாயாரை சுட்டார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, சிறுமியிடம் விரிவான விசாரணையை நடத்திய பிறகு அவரின் நோக்கம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண், அவரது குடும்பத்தினர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்திடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, சிறுமிக்கு ஆயுதம் எப்படி, எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரின் தாயை சிறுமி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.