சமீபகாலமாக மாரடைப்பு என்பது வயது வித்தியாசமின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் பள்ளி மாணவன் ஒருவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


9ம் வகுப்பு மாணவன்:


ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது கார்தானி. இந்த நகரத்தின் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தனியார் பள்ளி. இந்த தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவன் யோகேஷ் சிங். 14 வயதான அந்த சிறுவன் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.


இந்த  நிலையில், கடந்த 19ம் தேதி யோகேஷ் சிங் வழக்கம்போல பள்ளிக்கு வந்துள்ளான். வகுப்புக்கு பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்த நிலையில், யோகேஷ் வகுப்பறையை நோக்கி வந்து கொண்டிருந்தான். யோகேஷ் வருவதற்கு முன்பு அந்த வகுப்பறையின் வாசலில் ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.


மாரடைப்பால் உயிரிழப்பு:


அப்போது, திடீரென வகுப்பறையை நோக்கி வந்து கொண்டிருந்த மாணவன் யோகேஷ் சிங் ஆசிரியர் மீது சரிந்து விழுந்தான். இதனால், அந்த ஆசிரியர் பதற்றமடைந்தார். மயங்கிய நிலையில் சரிந்து விழுந்த யோகேஷ் சிங்கை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அந்த மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவனது மரணத்திற்கு காரணம் கார்டியாக் அரெஸ்ட் என்று தெரியவந்தது. சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு அவனது உடலை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் அவனது குடும்பத்தினரும் யார் மீதும் சந்தேகம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.


வேதனை:


சமீபகாலமாகவே இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வரும் நிலையில், தற்போது 9ம் வகுப்பு மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சமூகத்திற்கு ஆரோக்கியமற்றது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இதற்கு மாறி வரும் உணவுப்பழக்கவழக்கமும், போதிய உடற்பயிற்சி இன்மையுமே முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: Crime : சென்னை, நாவலூர் அருகே ஐ.டி பெண் ஊழியர் கொடூர கொலை.. கை, கால்கள் கட்டப்பட்டு எரித்துகொன்ற கொடூரம்..


மேலும் படிக்க: Crime: வரதட்சணை கொடுமை.. மனைவியின் மூக்கை கடித்து காயப்படுத்திய கொடூரம்.. என்று முடியும் இந்த அவலம்?