நூறு நாள் வேலை திட்டப் பயனாளிகள் தாங்கள் சம்பளம் பெறும் வங்கிக் கணக்கை,  ஆதார் உடன் இணைக்க இன்றே கடைசி நாளாகும்.


100 நாள் வேலை:


கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.  இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் உள்ளவருக்கு ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சிகளில் பணிவாய்ப்பு வழங்க தவறினால் ஊதியத்தை அபராதமாக வழங்கும் வகையில் விதிகள் உள்ளன. அதேநேரம், இந்த திட்டத்தில் பணியாளர்களுக்கான ஊதியம் வங்கிக் கணக்கு அடிப்படையிலும், ஆதார் கணக்கு அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், வங்கிக் கணக்கின் கீழ், பணியாளர்கள் அளித்த வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.


மத்திய அரசு திட்டவட்டம்:


இந்த சூழலில் தான் ”கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதியன்று, மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், 2023, பிப்ரவரி 1ம் தேதி முதல், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற, ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள்  கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது. ஆதார் மற்றும் வங்கிக் கணக்கை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி தான் கடைசி நாள்” என்றும் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.


இன்றே கடைசி நாள்:


அதன்படி, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்புக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. 100 நாள் வேலை அட்டை, வங்கிக் கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இதற்கான படிவத்தை வங்கியில் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்காவிட்டால் சம்பளம் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதுவரை ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைக்காதவர்கள் இன்றைய கடைசி நாள் வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


முக்கியத்துவம் பெறும் ஆதார்:


மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்ட் உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில்,  ஜுன் 30ம் தேதியுடன் அந்த அவகாசம் நிறைவடைந்தது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன. அதேபோல, ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு இணைத்திருப்பதும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.