தெற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கும், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் புதுச்சேரி காரைக்கால் டெல்டா மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் நாளை திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் திருவாரூர், தஞ்சாவூர், நாகை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்றைய முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.



 

தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகள் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு நாள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டது. மற்ற அனைத்து நாட்களும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். தற்போது தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது அதே நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தொடர்ந்து நான்காவது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் சாலைகள் அனைத்தும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலைகள் முழுவதுமாக மழை நீர் தேங்கி இருப்பதால் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து வாசிகள் தெரிவிக்கின்றனர். உடனடியாக நகராட்சி நிர்வாகம் மழை நீரை அகற்றி சாலையை சீர் செய்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



இன்று காலை 6 மணி நிலவரப்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் 15.6 மில்லி மீட்டரும், குடவாசலில் 27.2 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 11.6 மில்லி மீட்டரும் பாண்டவயாரு பகுதியில் 14.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். மழை விட்டால் மட்டுமே மழை நீரை வடிய வைக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அனைத்து கிராமங்களிலும் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது