தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை திறப்பது குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



 

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மாணவர்கள் பள்ளிக்கே செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான் மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து 9 முதல் 12 வரையிலான வகுப்புகளையாவது 50 சதவீத மாணவர்களுடன் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.



 

கொரோனா மூன்றாவது அலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு, மருத்துவ நிபுணர்கள் அளித்த உறுதி மற்றும் தைரியத்தின் காரணமாக 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை தொடங்கலாம் என முதல்வர் கூறியுள்ளார். செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டுமானால் அதற்கான தயார் நிலையில் பள்ளிகளும், வகுப்பு ஆசிரியர்களும் இருக்கிறார்களா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 


 

அதன் அடிப்படையில் பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். இதேபோன்று கடந்த ஆண்டும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதில் கூடுதலாக ஏதாவது சேர்க்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இது முடிவு செய்யப்பட்டுவிடும். அதன் பிறகு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்படும்.

 

தனியார் பள்ளிகளில் 85 சதவீதம் கல்வி கட்டணம் வசூலிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் 75 சதவீதம் தான் வசூலிக்க வேண்டும். அதையும் செலுத்த முடியாதவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் குழு அமைத்து முழுமையாக விலக்கு அளிக்க பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.



 

 

 

கொரோனா காலத்தை முன்னிட்டு பாடத்திட்டங்களை குறைப்பதற்கான வரைவு தயாராகிவிட்டது. விரைவில் நான் அதில் கையெழுத்திடவுள்ளேன். அதன்பிறகு எந்தந்த வகுப்புகளுக்கு எத்தனை சதவீதம் பாடம் குறைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படும். 

 

மாணவர்கள் ஆன்லைன் மூலம் கற்பதை விட வகுப்புகளுக்கு வர வேண்டும் என்பது தான் அரசின் நிலை. முதல்வரின் விருப்பமும் அதுதான். அதேநேரத்தில் 3ஆவது அலை வந்தால் அதனை எதிர்கொள்ளவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.  சில பகுதிகளில் குறிப்பாக மழைவாழ் பகுதிகளில் இணைதய சேவை சரியாக இருப்பதில்லை. இதனால் ஆசிரியர்கள் ஒரு மாணவரின் வீட்டுக்கு சென்று அந்த பகுதிகளில் உள்ள நான்கைந்து மாணவர்களை சேர்த்து வைத்து பாடம் நடத்தும் பணிகளையும் செய்து வருகின்றனர். மேலும், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஏதாவது ஒரு மாணவரின் செல்போனுக்கு பாடங்களை அனுப்பி அந்த பகுதியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் அதனை பகிர்ந்து பாடங்களை எழுத வைக்கும் பணிகளையும் சில ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

 

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை 2,04,379 பேர் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகளை செய்தல் போன்ற பணிகளை அரசு செய்யும் என்றார்.