போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்காததால், தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக திரண்டனர்.

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய நடத்தினர், ஓட்டுநர்கள் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தில், அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அந்த அகவிலைப்படி உயர்வை, அப்போது அரசு ரத்து செய்து, ஓய்வூதிய மட்டுமே வழங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்தை மட்டும் நம்பி இருப்பதால், வருவாய் இல்லாமல் வறுமையில் வாடி வருவதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர்.



 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் கடந்த 2015 முதல் இன்று வரை இந்த போக்குவரத்து ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாமல், இருந்து வருகிறது. இதனால் வாழ்வாதாரத்திற்கு போதிய வருவாய் இல்லாமல் வறுமையில் வாடுவதாக கூறி அரசை அரசிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்பத்தினர் வருகிற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுத்துள்ளனர்.

 

இதனை தொடர்ந்து தருமபுரி போக்குவரத்து மண்டலத்தைச் சார்ந்த ஓய்வூதியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பதாக மனுவுடன் வந்தனர்.  இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் உள்ளே அனுமதிக்காததால், நுழைவாயிலில் வாக்காளர் அடையாள அட்டையை எல்லோரும் காண்பித்தவாறு காத்திருந்தனர். இதனை அடுத்து காவல் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மனுவை மட்டும் வாங்கி சென்றனர்.



 

மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றப்படாததால் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ஓய்வூதியதாரர்கள் குடும்பத்தினர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல், தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர். மேலும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்திருந்தார். ஆனால் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும், வழக்கம் போல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க ஏராளமான மக்கள் வந்திருந்தனர். 

 

மேலும் மனு எழுதி வந்தவர்கள் அனைவரும், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். தேர்தல் நேரத்திலும் கூட ஏராளமான மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனுக்களை கொடுக்க வருவது குறிப்பிடத்தக்கது.