தருமபுரி நகரில் உள்ள குமாரசாமிபேட்டையில் உள்ள இந்து அறநிலை துறைக்கு சொந்தமான ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில்கள் உள்ளன. 


கோவிலில் தூய்மை பணி செய்து கொண்டிருந்த பெண் ஊழியர்


இன்று காலை வழக்கம் போல் கோயில் நடை திறந்து ஊழியர்கள் தூய்மை பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் ராஜேஸ்வரி(55) என்ற மூதாட்டி கோயிலுக்குள் தூய்மை பணியில் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று காக்கிச்சட்டை அணிந்து, காவலர் உடையில் பெரிய கத்தியுடன் கோயிலுக்குள் ஒரு இளைஞர் நுழைந்துள்ளார். 




பெண்ணை சரமாரியாக வெட்டிய இளைஞன்


அப்பொழுது பணி செய்து கொண்டிருந்த ராஜேஸ்வரியை திடீரென கத்தியால் தலை, கழுத்து, காது, கை உள்ளிட்ட 13 இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளார். 


இதில் சற்றும் எதிர்பாராத ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று பார்த்தபொழுது கத்தியை காட்டி அனைவரையும் துரத்தி உள்ளார். 


பயந்து ஓடிய பக்தர்கள்


இதனால், அனைவரும் பயந்து கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். மேலும் கூட்டமாக வந்த பொது மக்களை பார்த்து திடீரென ஓடிய அந்த இளைஞர் கோயிலில் கருவறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராஜேஸ்வரியை அங்கிருந்தவர்கள் மீட்டு  தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


கருவறைக்குள் ஒளிந்த இளைஞனை லாவகமாக பிடித்த காவல்துறையினர்


 இதனை தொடர்ந்து தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கோவிலின் கருவறையில் இருந்த இளைஞரை லாவகமாகமாக பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.


தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சித்தி விக்னேஷ் (22) என்பது தெரிய வந்தது. மேலும் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலமாக தருமபுரிக்கு வந்துள்ளார். தருமபுரிக்கு வந்த சக்தி விக்னேஷ் தருமபுரி ஒட்டியுள்ள பகுதியில் சுற்றி திரிந்துள்ளார்.


 நேற்று இரவு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுற்றி திரிந்தபோது அங்கு பணியில் இருக்கும் காவலர்களின் அறைக்கு சென்று தலைமை காவலர் உடைய எடுத்து சென்றுள்ளார். 
இந்த நிலையில் இன்று காலை குமாரசாமிபேட்டை பகுதியில் இளநீர் கடைக்காரர் மற்றும் பலாப்பழம் விற்கும் வியாபாரிகளிடம் தகராறு செய்துள்ளார்.


பலாப்பழ வியாபாரியிடம் கத்தியை பிடுங்கிக் கொண்ட இளைஞன்


 அப்போது பலாப்பழம் வியாபாரியிடம் இருந்து கத்தியை பிடிங்கி கொண்டு,  தலைமை காவலர் உடையில் கத்தியுடன் பல இடங்களில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. 


மேலும் இவர் திருச்செந்தூர் பகுதியில் இது போன்று பல இடங்களில் தகராறு செய்து, தாக்குவது போன்ற சய்பவங்களில் ஈடுபடுவதும், போதைக்கு அடிமையாக சுற்றித் திரிவதாக தெரிகிறது. 


மேலும் இன்றும் அதிக போதையில் இருந்தததாக தெரிகிறது. மேலும் இவர் வேறு ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளாரா? எதற்காக கோயிலில் சென்று பெண்ணை வெட்டியுள்ளார் என்பதை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டப் பகலில் பிரசித்தி பெற்ற கோயிலில் கத்தியுடன் சென்று பெண்ணை வெட்டித்தாக்கிய சம்பவம் குமாரசாமிபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.