கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் அருகே உள்ள கரிய பெருமாள் வலசை பகுதியை சார்ந்தவர் மாதையன் மனைவி அலமேலு (48) கூலித்தொழிலாளி. இவரது கணவர் மாதையன் இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 


இவரது இரண்டாவது மகன் ஏழுமலை இவரது மனைவி பவித்ரா (21 ). ஏழுமலை திருப்பூரில் தங்கி அங்குள்ள கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இதனால் அலமேலுவும் பவித்ராவும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.  நேற்று முன்தினம் மாலை அலமேலுவின் மூத்த மகன் சேட்டு தனது தாயாரை தேடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் பவித்ரா மட்டும் இருந்துள்ளார். அவரிடம் கேட்டபோது, காலையில் வெளியே சென்ற அலமேலு இன்னும் திரும்பவில்லை என தெரிவித்தார். அப்போது தாயை தேடிச் சென்றுள்ளார். அப்போது கரிய பெருமாள் வலசை பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் பாதி உடல் எறிந்த நிலையில் அலமேலு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.


இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி பார்த்திபன் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார், அலமேலுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் காலை அலமேலுவிற்கும் பவித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் பவித்ராவை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தனது காதலன் மணிகண்டன் அலமேலுவை கழுத்தை  நெறித்து கொலை செய்ததாக பவித்ரா கூறினார். 


இதை அடுத்து மணிகண்டனை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். அதில் திடக்கிடும் தகவல்கள் வெளியானது ஏழுமலை திருப்பூரில் தங்கி வேலை செய்து வருவதால் பவித்ரா தனது மாமியாருடன் வசித்து வந்துள்ளார். 


 


கொலை செய்த மாணவன் மணிகண்டன்



இதனிடையே பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்பவரது மகனான பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மணிகண்டன் (19) என்பவருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த அலமேலு தகாத உறவை கைவிடும் படி மருமகளை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் மணிகண்டன் உடனான உறவை கைவிடவில்லை. நேற்று முன்தினம் காலையும் இது தொடர்பாக மாமியார் மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மாலை 4:30 மணிக்கு ஆடு மேய்க்க சென்ற பவித்ரா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அலமேலு மருமகளை தேடி சென்றுள்ளார்.


அப்போது கலியபெருமாள் வலசை பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் பவித்ராவும் மணிகண்டனும் நெருக்கமாக இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார். பின்னர் இருவரையும் அலமேலு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அலமேலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


ஒரு கட்டத்தில் அவரது கழுத்தை இறுத்தி கொலை செய்துள்ளார். இதை பார்த்து பயந்து போன பவித்ரா அங்கிருந்த தனது வீட்டிற்கு ஓடிச்சென்று விட்டார். பின்னர் தனது வீட்டுக்கு சென்ற மணிகண்டன் டூவீலரில் இருந்த பெட்ரோலை ஒரு கேனில் பிடித்துக் கொண்டு வந்து அலமேலுவின் உடல் மீது ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார் என்பது தெரியவந்தது.


 இதனை அடுத்து  மணிகண்டனையும், பவித்ராவையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளின் தகாத உறவை கண்டித்ததால் பெண் கழுத்தை நெறித்து பெட்ரோல் ஊற்றிய எடுத்து கொலை செய்த பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.