தருமபுரி நாடாளுமன்ற தொகுதியை வெற்றி பெற வைத்த அரூர் மக்களுக்கு பரிசாக, பேரூராட்சியை நகராட்சியாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து, திமுக கூட்டணி கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.



தமிழ்நாடு முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்டம் ஊரக பகுதிகளுக்கு தொடங்கி வைப்பதற்காக நேற்று முன் தினம் தமிழ்நாடு முதலமைச்சர், தருமபுரி மாவட்டம் பாளையம் புதூரில் மனுக்கள் பெறும் முகாமினை தொடங்கி வைத்தார். அப்பொழுது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்த அரூர் பகுதி மக்களுக்கு பரிசாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் அரூர் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்துவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அரூரில் இன்று திமுக சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுகவை வெற்றி பெற வைத்த அரூர் மக்களுக்கு பரிசளிக்கும் விதமாக அரூர் பேரூராட்சியை நகராட்சியாக அறிவித்து அரசாணையை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திமு, விசிக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஒன்றிணைந்து,  அரூர் ரவுண்டானாவில் உள்ள டாக்டர். அம்பேத்கரின் திருவுருவ சிலை மற்றும் பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அரூர் பேரூராட்சியை நகராட்சியாக அறிவித்த  தமிழக முதல்வருக்கு நன்றி என்றும், நகராட்சியே வருக, வருக என்றும் முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து பேரறிஞர் அண்ணா சிலை அருகில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, விசிக மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா, கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஏ.குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, 




நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கும் 40 வெற்றி தேடித் தந்த தமிழக முதல்வருக்கு, தருமபுரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக முதல்வர் கடந்த 11ஆம் தேதி அன்று தர்மபுரிக்கு வருகை தந்து மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை துவக்கி வைத்தார். மக்கள் நலம் சார்ந்த எந்த திட்டமாக இருந்தாலும் அதை தர்மபுரி மாவட்டத்தில் தான் துவக்கி வைக்கின்றனர். மக்களுடன் முதல்வர் திட்டத்தினை துவக்கி வைக்கும் போது, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியை வென்றெடுத்து கொடுத்ததற்காக பரிசாக 10 திட்டங்களை அறிவித்துள்ளார். 


முதல் திட்டமாக அரூர் பேரூராட்சியை நகராட்சியாக மாற்றப்படும், அரூர் அரசு மருத்துவமனை 51 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்படும், சிட்லிங்கில் சிறுதானிய கிடங்கு அமைத்து தரப்படும், தீர்த்தமலையில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். 


குறிப்பாக அரூர் சட்டமன்ற தொகுதிக்கு இது போன்ற திட்டங்களை  அறிவித்துள்ளார். மேலும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் என்னென்ன தேவைகள் குறித்து திட்டங்களை நிறைவேற்றுவதாக தமிழக முதல்வர் கூறியிருக்கிறார் என தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி தெரிவித்தார்.