கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவி, நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். 


போலி என்சிசி பயிற்சியாளர் வழக்கில் திடுக்கிடும் உண்மைகள்


 மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி தாளாளர் முதல்வர் உள்பட மொத்தம் 13 பேர் பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் சிகிச்சை பலனின்றி கடந்த 23ஆம் தேதி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். 


இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் உத்தரவின் பெயரில் ஐஜி பவானிஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு மற்றும் சமூக நலத்துறை செயலாளர் ஜெய் ஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


என்சிசி போலீஸ் பயிற்சியாளர் மீண்டும் ஒருவர் கைது


இந்த விசாரணையில் வேறு ஒரு தனியார் பள்ளியில் சிவராமநால் நடத்தப்பட்ட போலி முகாமில் கலந்து கொண்ட 14 வயது மாணவியும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பள்ளியின் பெண் முதல்வரும் கைது செய்யப்பட்டார். 


 இதனால் கிருஷ்ணகிரி அருகே இரு பள்ளிகளில் நடைபெற்ற போலி என்.சி.சி பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிவராமன் மட்டும் உயிரிழந்துள்ளார்.


இந்த வழக்கில் விசாரணை நடத்தும் ஐஜி பவனேஸ்வரி


இந்த வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி பாவனீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசார் போலி பயிற்சியாளர் சிவராமனுக்கு பயிற்சி முகாம் நடத்த உதவியுடன் போலி முகாமில் கலந்து கொண்டதாக  காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்சிசி அலுவலரும், கிருஷ்ணகிரி மாவட்ட என்.சி.சி ஒருங்கிணைப்பாளருமான, கோபு என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.


 இந்த விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளில் உள்ள என்.சி.சி அலுவலர்கள் மற்றும் என்.சி.சி முகாம்கள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய கோபுவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.   


ஆனால் போலி பயிற்சியாளராக சிவராமன் இருப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபு உதவி செய்தது போலி முகாம் குறித்த தகவல்களை மறைத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட என். சி .சி ஒருங்கிணைப்பாளர் கோபுவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். மேலும் சிவராமன் நடத்திய போலி முகாம்கள் குறித்து தெரிந்தும் மாவட்ட என்.சி.சி ஒருங்கிணைப்பாளர் கோபு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார்.


 குறிப்பாக ஒரு சில தனியார் பள்ளிகளில் நடந்த போலி முகாம்களில் கோபுவும் கலந்து கொண்டது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலி என்.சி.சி முகாம் நடத்திவருக்கு உதவியதாக அரசு பள்ளி என்.சி.சி பயிற்சியாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


அதேபோல் இந்த முகாம் நடத்திய போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமனுக்கு உதவியது மற்றும்  தொடர்பு இருப்பதாக பல பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.