தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகாவதி ஆற்றின் கரையில் பெரும்பாலை கிராமம் அமைந்துள்ளது. இந்த பெரும்பாலை கிராமத்தில் உள்ள செம்மனூர் சிவன் கோயிலுக்கு எதிரில் பெரிய தொல்லியல் மேடு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. 


இதனை அடுத்து தமிழகத் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணிகள் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் நடைபெற்று வந்தது. 


அப்பொழுது பெரும்பாலை பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் அகழாய்வில் கிடைத்தது. இந்த அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை எல்லாம் சேகரித்து வந்தனர். 


இதில் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் இரும்பு காலத்தைச் சார்ந்த மக்கள் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு சான்றாக சிவப்பு, கருப்பு, சிவப்பு மண்பாண்டங்கள், சுடுமண் பொம்மை, சங்கு வளையல்கள், வட்ட சில்லுகள், களிமண் மணிகள், கண்ணாடி வளையல்கள், செம்பு மற்றும் இரும்பாலான பொருட்களின் பகுதிகள், விலை உயர்ந்த மணிகள், பூசப்பட்ட தரை தளம் செங்கல் பட்டைகளும், தொழில் பட்டறைகளும் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளது. அவற்றில் மண் பாண்டங்களில் இடப்பட்ட, வடிவில் சார்ந்த குறியீடுகளை தொல்லியல் ஆய்வாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 


ஒரு லட்சம் சதுர மீட்டர் உள்ள தொல்லியல் மேட்டில் வெறும் 425 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டது. இதில் 1028 பானை குறியீடுகள் கிடைத்துள்ளது. அவற்றில் 297 குறியீடுகள் நன்கு அடையாளம் காண்பவையாக உள்ளது.


இதில் 732 குறியீடுகள் வரையறுக்க முடியாதவை. இதில் பெரும்பாலானவற்றில் ஒரே மாதிரியான குறியீடுகள் இருந்துள்ளது. அதாவது நட்சத்திரம், ஆங்கில எழுத்துக்களான யுடிஏ போன்ற வடிவங்கள், ஏணி, ஸ்வஸ்திக், வில் அம்பு உள்ளிட்ட வடிவங்கள் அதிக அளவில் இருந்துள்ளது. 


அதேபோல கிடைக்கோட்டின் கீழ், வலப்பக்கமும் இடப்பக்கமும் சம எண்ணிக்கையில் சரிந்த கோடுகள் உள்ள கீரல்கள், கிடைமட்டமாக சம இடைவெளியுடன் கூடிய இரண்டு கோடுகள், இரண்டு செங்குத்துக் கோடு, மேல் அல்லது நடுவில் அலை போல் நெலிந்த கோடுகள் உள்ளிட்ட வடிவில் கீரல்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது. ஆனால் ஒரு தமிழி எழுத்து கீரல்கள் கூட கிடைக்கவில்லை. இங்குள்ள அகழாய்வு குழிகளில் நான்கு கரிம பொருட்கள் அமெரிக்காவில் உள்ள பீட்டா காலக் கணிப்பு ஆய்வகத்திற்கு அனுப்பி சோதிக்கப்பட்டதில், அவை கிமு 6 ஆம் நூற்றாண்டுக்கு முன் பின் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 


இதேபோன்று குறியீடுகள் ஈரோடு மாவட்டம் கொடுமணல், திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் கிடைத்துள்ளது. இவற்றில் இருந்து தமிழி எழுத்துக்கள் தோன்றும் முன், வர்த்தகர்கள் தங்களின் கருத்தை தெரிவிக்க இதுபோன்ற குறியீடுகளை, தமிழகம் முழுவதும் பயன்படுத்தி இருக்கலாம் என்று இது குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.