அரூர் அருகே 20 ஆண்டுக்கு முன் கொடுக்கப்பட்ட பட்டா நிலத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டி அரசு பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்ட நரிக்குறவர் மக்கள்.

 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பச்சனாம்பட்டி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு கடந்த 2000-ல் திமுக அரசு  இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்த பகுதியில் 25 மீட்டர் புறம்போக்கு நிலம் இருந்துள்ளதாகவும், அதன் அருகே  முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன், என்பவர் வீடு கட்டி வாழ்ந்து வந்துள்ளார். அப்போது 25 மீட்டர் புறம்போக்கு நிலத்தை சேர்த்து திருமுருகன் சரஸ்வதி, என்பவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 2013-ம் ஆண்டு 25 மீட்டர் புறம்போக்கு நிலத்தோடு 5 மீட்டர் நிலத்தை சேர்த்து சுமார் 30 மீட்டர் நிலத்தை, திருமுருகன் சரஸ்வதி, பத்திரப்பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.



 

ஆனால் கடந்த 20 ஆண்டுக்கு முன் நரிக்குறவர் மக்களுக்காக திமுக அரசால் கொடுக்கப்பட்ட நிலத்தில், ஐந்து மீட்டர் நிலம் உள்ளது என்று திருமுருகன் சரஸ்வதி, அழுத்தம் கொடுத்து வந்ததால், நில அளவையாளரை கொண்டு நிலத்தை அளவீடு செய்துள்ளனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் எங்களுக்கு சேர வேண்டிய ஐந்து மீட்டர் நிலம் நரிக்குறவர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தில் உள்ளதாக திருமுருகன் சரஸ்வதி கூறி வருவதால், நரிக்குறவர் மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து பார்க்கும் போது பேருந்துகள் செல்லும் தார்சாலை வரையில் வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், அரூர் வருவாய் கோட்டாட்சியர், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நரிக்குறவர் மக்களுக்கு 20 ஆண்டுக்கு முன் கொடுக்கப்பட்ட நிலத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வலியுறுத்தி, அரசுப் பேருந்தை வழி மறித்து நரிக்குறவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் துறை, மற்றும் காவல் துறையினர் நரிக்குறவர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது தங்களுக்கு வழங்கபட்ட இடத்தை முறையாக அளவீடு செய்யப்படும் என்று வருவாய் துறையினர் உறுதி அளித்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட  மக்கள் சாலை மறியலை கைவிட்டு, களைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொட்டம்பட்டி- அரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.