தர்மபுரியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அரூர் உள்ளது. ஊராட்சியாக இருந்த அரூர் கடந்த 1945 -ஆம் ஆண்டு பேரூராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்டது. 1955 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1960 மே 23-ஆம் தேதி முதல் நிலை பேரூராட்சியாகவும், 1969 செப்டம்பர் 17-ஆம் தேதி தேர்வு நிலை பேரூராட்சியாகவும், 2023 ஏப்ரல் 15- ஆம் தேதி சிறப்பு நிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.


அரூர் பேரூராட்சித் தலைவராக இந்திராணி தனபால்


 தற்போது பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தலைவராக இந்திராணி, துணைத் தலைவராக சூர்யா தனபால் மற்றும் 16 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். அரூர் பேரூராட்சி 14.75 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். மக்கள் தொகை 32 ஆயிரம் பேர் உள்ளனர். தினசரி அரூருக்கு பத்தாயிரம் பேர் பல்வேறு அலுவலகப் பணிக்கு வந்து செல்கின்றனர். அரூர் மையப் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் பஸ் வசதி உள்ளது.




தேசிய வங்கிகள், அரசு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. அரூர் பேரூராட்சிக்கு கடை வாடகையாக ஆண்டுக்கு 7.50 கோடி வருவாய் கிடைத்து வருகின்றது. பேரூராட்சியில் 43 தூய்மை பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஊழியர்கள் 22 பேர் என மொத்தம் 100 பேர் பணியாற்றி வருகின்றனர்.


தினசரி 7 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது


 இந்த பேரூராட்சியில் தினசரி 7 டன்  குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. 
அரூர் சுற்றுவட்டார மலை கிராமங்களான சித்தேரி, சிட்லிங், ஏகே தண்டா,கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, தீர்த்தமலை உள்ளிட்ட 100 கணக்கான கிராமங்களில் இருந்து மக்கள் தினசரி அரூர் கடை வீதிக்கு நேரில் வந்து வீட்டிற்கும், விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.


அனைத்து நகரங்களுக்கும் நேரடியாக பஸ் வசதி 


 அரூரில் இருந்து சென்னை, பெங்களூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு நேரடியாக பஸ் வசதி உள்ளது. இதனால் எப்போதும் அரூர் நகர பகுதி பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூருக்கு வந்த தமிழக முதல்வர் அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.


அப்போது அரூர் அருகே உள்ள மொப்பிரிபட்டி, h. தொட்டம்பட்டி, ஊராட்சிகளை இணைத்து அரூர் பேரூராட்சியை அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றார். இதை அடுத்து நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் மும்முரமாக அலுவலக ரீதியாக நடந்து வருகிறது.




 விரைவில் நகராட்சியாக அரூர் பேரூராட்சி இயங்கும் இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- 


அரூர், மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டி ஊராட்சி இணைத்து அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இதை தொடர்ந்து அலுவலக ரீதியான பணிகள் மும்முரமாக நடக்கிறது. தற்போது அரூர் பேரூராட்சி 14.75 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது 113 தெருக்கள் உள்ளன. மோ ப்பெரிப்பட்டி, தொட்டம்பட்டி ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக மாறிய பின்னர் அரூர் நகராட்சி 21 . 69 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும்.


 மக்கள் தொகை 32 ஆயிரத்திலிருந்து 48 ஆயிரம் ஆக உயரும். வார்டு 18ல் இருந்து 30 வார்டாக மாறும். நகர மக்களுக்கு மேலும் அடிப்படை வசதிகள் கிடைக்கும். சிங்கார நகரமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் இவ்வாறு கூறினர். அரூர் பேரூராட்சி பகுதியில் மக்கள் தொகை  பெருக்கத்தாலும் தொழில் வளர்ச்சியை ஏற்பட்டு வருவதாலும் அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.



அரூர் மக்களுக்கு கல்வி அறிவு அதிகம்


அரூர் மக்களின் சராசரி கல்வி அறிவு 75 சதவீதம் ஆகும். இதில் ஆண்களின் கல்வி அறிவு 82%, பெண்களின் கல்வி அறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதாக உள்ளது.