தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கும் கர்நாடகாவில் இருந்து கேரளா மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு தர்மபுரி மாவட்ட எல்லையில் தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலை உள்ளது. இருபுறம் மலைகளால் சூழப்பட்டுள்ள தொப்பூர் கணவாயில் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.


தினந்தோறும் லாரி கன்டெய்னர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தொப்பூர் கணவாய் கடந்து செல்கின்றன. மேலும் ஆந்திரா, வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய முக்கியமான சாலையாகவும் இருந்து வருகிறது.


வாகன விபத்துகள் ஏற்பட காரணம் 


கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதி ஆறு கிலோமீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ளது. இச்சாலையில் கட்ட மேடு முதல் போலீஸ் சோதனை சாவடி வரை உள்ள மூன்று கிலோமீட்டர் தூரம் சாலை மிகவும் இறக்கமாகும் வளைவாகவும் காணப்படுகிறது. இதில் அபாயகரமான எஸ் வடிவ வளைவுச் சாலையும் உள்ளது. மலைப்பாதையில் கனரக வாகனங்களை ஓட்டுவது ஓட்டுனர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. 




தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் இரக்கத்தில்தான் சாலை விபத்து அதிகம் நடக்கிறது. நேற்று ஒரு லாரி இரண்டு கார்கள் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இரு தினங்களுக்கு முன்பு லாரி கவிழ்ந்தது. இரண்டு பேர் காயம் அடைந்தனர். தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் வட்டாரப் போக்குவரத்து துறை தேசிய நெடுஞ்சாலை துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


இதனால் விபத்து குறைந்துள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலிருந்து ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது. அதாவது ஆண்டிற்கு 24 பேர் தொப்பூர் கணவாய் பகுதியில் சாலை விபத்தினால் உயிரிழந்தனர்.


கடந்த ஆண்டு விபத்தில் பலியானவரின் எண்ணிக்கை ஒன்பதாக குறைந்துள்ளது. ஆனாலும் விபத்து தொடர்ந்து நடக்கிறது.


சமூக ஆர்வலர்களின் கோரிக்கை


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் ஊர்களில் தொப்பூர் கணவாய் பகுதி இரக்கத்தில் சாலையின் விதிகளின்படி 10 மீட்டர் இடைவேளை விட்டு ஒவ்வொரு கனரக வாகனங்கள் மெதுவாக செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அணிவகுப்பு செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் விபத்துக்கான காரணங்களை கண்டறிய ஒரு குழு அமைக்க வேண்டும். அதாவது இறக்கத்தில் லாரி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வருவதற்கான காரணங்கள் என்ன கவனக்குறைவா என்றும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். மேலும் இறக்கத்தில் வரும்போது சரக்கு ஏற்றி வரும் லாரிகள் விதிகளை கடைபிடித்து 10 மீட்டர் இடைவெளியில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கண்காணிக்க தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.


இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரிகள் கூறுகையில்:-


தொப்பூர் கணவாயில் 75% விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது. 25% விபத்துகள் சாலையின் இறக்கம் வளைவு தன்மையால் விபத்து நடக்கிறது. தொப்பூர் கணவாயில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தெளிவாகத் தெரியும் வகையில் சோலார் லிங்கர் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்தவுடன் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஒலிபெருக்கியில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. வேகத்தை குறைக்க ஸ்பீடு ரேடார் கன் மூலம் கண்காணித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.


சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு


சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் வாகனத்தை நிறுத்தி பரிசோதித்து மெதுவாக செல்லும்படி எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.


இந்நிலையில் தொப்பூர் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் தொப்பூர் கணவாயில் விபத்தை மேலும் கட்டுப்படுத்த புதியதாக ஸ்பீடு ரேடார் கன் என்ற கருவி மூலம் லாரி, கார் உள்ளிட்ட வாகனத்தின் வேகத்தை காட்டும் டிஸ்ப்ளே யூனிட் விரைவில் அமைக்கப்பட உள்ளது. 


டிஸ்ப்ளே யூனிட் செய்யும் பணி 


டிரைவர்கள் எளிதாக பார்க்கும்படி தொப்பூர் கணவாய் சாலை ஓரத்தில் டிஸ்ப்ளே அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஓட்டுநர்கள் வாகனத்தின் வேகத்தை கண்டறிந்து மெதுவாக ஓட்டி செல்ல வாய்ப்பு ஏற்படுத்தப்படும். மேலும் சுங்கச்சாவடி கண்ட்ரோல் ரூமில் இருந்து பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.