தருமபுரி மாவட்டம் பொம்மிடி குக்கல்மலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் என்பவர் பொக்கலைன் இயந்திர ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.


இந்த நிலையில் தமிழரசனும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி (25) இருவரும் காதலித்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு வானிஸ்கா(6), ஹாசினி(4) இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதில் மூத்த மகள் வானிஸ்கா அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.  


கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு


இந்த நிலையில் கணவன் மனைவிக்கும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரேவதி தந்தை வீட்டுக்கு சென்று விடுவதும், பிறகு சமரச பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வருவதுமாக இருந்துள்ளார். 


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்குமிடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது குழந்தைகளை அழைத்துச் சென்று, வீட்டு விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.


சடலமாக மீட்கப்பட்ட தாய் குழந்தைகள்


தொடர்ந்து நீண்ட நேரமாகியும், வரவில்லை. இதனால் கோவத்தில், தந்தை வீட்டுத்கு சென்றிருக்கலாம் என இருந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை அருகில் தனது உறவினரின் பார்த்தீபன் எனபவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருத்த சுமார் 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில், தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


சடலம் மீட்பு


தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி, தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என மூன்று பேரின் சடலங்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு பொதுமக்களின் உதவியுடன் மூன்று பேரின் சடலத்தை, கயிறு கட்டில்களின் மூலம் மீட்டனர். அப்பொழுது ரேவதி மற்றும் குழந்தைகளின் காலில் ரிப்பன் கட்டி, ஒருவரை ஒருவர் பிரியாத வகையில் சடலமாக இருந்துள்ளனர்.


இதனை தொடர்ந்து மூன்று சடலங்களையும் மீட்ட தீயணைப்பு துறையினர், ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


பொம்மிடி காவல்துறையினர் விசாரணை


இந்த சம்பவம் குறித்த, பொம்மிடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் ரேவதியின் கணவர் தமிழிடம் விசாரணை நடத்தினர். மேலும் சடலமாக இருந்த மூன்று பேரின் கால்களில் ரிப்பன் கட்டப்பட்டு இருந்ததால், இந்த மரணத்தில் காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.


இதனால் இது கொலையா தற்கொலையா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறனர். மேலும் தாய், இரண்டு பெண் குழந்தைகளுடன் விவசாய கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.