தொப்பூர் அருகே வனப் பகுதிக்கிடையில் வீட்டில் இயந்திரம் வைத்து 13 கர்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக கருவின் பாலினம் தெரிவித்த கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இயந்திரம் வைத்து பாலினம் தெரிவித்தவர் தப்பி ஓடினார்.

 

தருமபுரி மாவட்டத்தில் இயந்திரம் வைத்து, தற்காலிக முகாம்கள் அமைத்து ஒரு கும்பல் சட்ட விரோதமாக கருவின் பாலினம் தெரிவித்தல் மற்றும் கருக்கலைப்பு ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கருவின் பாலினம் தேர்வை செய்தல் தடை சட்ட மாநில கண்காணிப்பு குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் கர்ப்பிணிகளை பரிசோதனை செய்ய அழைத்து செல்லும் இடைத்தரகர் வனிதாவின், தொடர்பு எண்ணை வைத்து, இந்த குழு ஒரு பெண்ணை கர்ப்பிணியாக அனுப்பி வைத்துவிட்டு, பின் தொடர்ந்து சென்றுள்ளது. அந்தக் கும்பல் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் அடுத்த பரிகம் கிராமத்தில் உள்ள புஷ்பாகரன் என்பவரின் வீட்டில் தற்காலிக முகாம் அமைத்து, இயந்திரம் வைத்து 13 பெண்களுக்கு கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.



 

மேலும், அடர்ந்த வனப்பகுதிக்குள் நெட்வொர்க் இல்லாத இடம் என்பதால், இந்த இடத்திற்கு கண்காணிப்பு குழு வர தாமதமாகி உள்ளது. அதற்குள்ளாக 13 பெண்களுக்கு கருவின் பாலினம் குறித்த தெரிவித்துவிட்டு, இயந்திரத்தை எடுத்துக் கொண்டு ஒருவர் சென்றுள்ளார். தொடர்ந்து பரிசோதனை முடித்த வந்த பெண்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்பொழுது இடைத்தரகர் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த வனிதா என்பது தெரியவந்தது. தொடர்ந்து இடைத்தரகர் வனிதாவை பிடித்து விசாரணை நடத்தியதில்,  முறையாக மருத்துவம் படிக்காத கள்ளக்குறிச்சியை சேர்ந்த வடிவேல் என்பவருடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.

 

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 13 கர்ப்பிணி பெண்களை நேற்று சோதனைக்காக அழைத்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஓரிடத்துக்கு வரவழைத்து அங்கிருந்து காரில் (திமுக கொடி கட்டிய கார்) பரிகம் கிராமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, பாலினம் கண்டறிந்து தெரிவிக்கும் உபகரணங்களுடன் தயாராக இருந்த வடிவேல் 13 பெண்களையும் பரிசோதனை செய்து பாலினம் கண்டறிந்து தெரிவித்துள்ளார். இதற்கு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கர்ப்பிணிகளை அழைத்து வருவதற்காக ஒரு நபருக்கு ரூ.5,000 வீதம் வனிதாவுக்கு கமிஷன் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பாலினம் அறிந்து கொண்டவர்களில், கருக்கலைப்பை தேர்வு செய்யும் பெண்களுக்கு மற்றொரு நாளில் வேறொரு இடத்தில் கருக்கலைப்பு மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. 



 

இதனை தொடர்ந்து இடைத்தரகர் வனிதா, காரின் ஓட்டுநரான முருகன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். அதேபோல, முறையான மருத்துவம் படிக்காமல் இயந்திரம் வைத்து, பாலினம் கண்டறிந்து சொல்லிய, தலைமறைவாகவுள்ள வடிவேலை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த வடிவேல் என்பவர் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருவதும், இதுவரை மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பணிக்காக வீட்டை வழங்கிய, பரிகம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பாகரன் என்பவர் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. இதுதவிர, கருவின் பாலினம் அறிந்து கொள்ள வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு போதிய அறிவுரை மற்றும் எச்சரிக்கை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.