தருமபுரியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில், பசிக்குதா வாங்க, சாப்பிடுங்க என்று உணவு வழங்கும் திட்டத்தின்  1000-வது  நாளையொட்டி, மதிய உணவை  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

 

தருமபுரியில் கடந்த 10 ஆண்டுகளாக மை தருமபுரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பெருந்தற்று காலத்தில் உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, பசிக்குதா வாங்க சாப்பிடுங்க என்று உணவு வழங்கும் சேவையை தொடங்கினர். இதில்  நாள்தோறும் மதிய நேரத்தில், மருத்துவமனை அருகில்  உணவு வழங்கி வந்தனர். இந்த சேவை தொடர்ந்து 999 நாள் கடந்து,  இன்று ஆயிரமாவது நாளை ஒட்டி தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.  இந்த அமைப்பு நாள்தோறும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு பசிக்குதா வாங்க சாப்பிடுங்க என்ற வாசகத்துடன் பொதுமக்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கி வருகின்றனர். இதில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் உதவியாளர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் பெண்கள் உள்ளிட்டோர் என இதுவரை சுமார் 6 இலட்சம் பேருக்கு, உணவை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். 



 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ,”மை தருமபுரி அமைப்பு போல இவர்களின் செயல்பாடு கேட்டு அறிந்து கடலூர் மாவட்டத்தில் மை கடலூர், மை குறிஞ்சிப்பாடி என பொதுமக்களுக்கு பசியாற்றும் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளேன். இந்த அமைப்பினரிடம் நான் இன்னும் பேசவில்லை நேற்று ஒரு நிமிடம் பேசினார்கள். இன்று இரண்டு நிமிடம் பேசி இருக்கிறேன். இவர்களின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. இதைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டு, நாங்களும் இதற்கு முடிந்த உதவியை செய்யவுள்ளோம். தனது வீட்டில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளித்து வருகிறோம்.  மேலும் மை தருமபுரி அமைப்புக்கு திமுகவினரும் சேவை செய்ய வேண்டும்” என கட்சியினருக்கு அறிவுத்தினார்.



 

இன்று மை தருமபுரி அமைப்பு பசிக்குதா வாங்க, சாப்பிடுங்க என்ற இலவச முதிய உணவு திட்டம் தொடங்கி ஆயிரமாவது நாள் என்பதால்,  இனிப்பு, காய்கறி சாதம், தயிர் பச்சடி, சாம்பார் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இந்த  நிகழ்ச்சியில் மை தருமபுரி அமைப்பு தலைவர் சதீஷ்குமார், தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி மற்றும் மை தருமபுரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல கலந்து கொண்டனர்.