தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே வேப்பாடி ஆறு அரை கிலோமீட்டர் தூரத்தில் செல்கிறது. சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை ஏற்காடு பகுதியின் வடக்கு பகுதியில் இருந்து காட்டாறுகள் ஒன்று கூடி   வேப்பாடி ஆறாக உருவாகி ஓடுகின்றது.


பின்னர்  பொம்மிடியின் அருகில் அமைந்துள்ள ஆனைமடுவு என்ற இடத்தில் தருமபுரி மாவட்ட எல்லைக்குள் நுழைகிறது.  இங்கிருந்து  தொப்பையாறுடன் கலந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தொப்பையாறு அணையில் இணைந்து, மீண்டும்  தொப்பூர் அருகே சேலம் மாவட்ட எல்லைக்குள் சென்று விடுகிறது.


மழைக்காலங்கள் தொடங்கி  வருடத்தில் பல மாதங்கள் நீர் செல்லும் இந்த வேப்பாடி ஆற்றில் மாவட்ட எல்லையில் உள்ள ஆணைமடுவு என்ற இடத்தில் அணை கட்ட வேண்டும் என தொடர்ந்து இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால்   50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள இரு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு ம் வாய்ப்புள்ள நிலையில், இது குறித்து இந்து தமிழ்திசையில்   கடந்த ஆண்டு  செய்தி வெளியான நிலையில், அடுத்த சில நாட்களில்  தருமபுரி  மாவட்ட ஆட்சியர்  சாந்தி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இத்திட்டம் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து சென்றனர்.


பின்னர் வேப்பாடியாற்றில் தடுப்பணைக் கட்டுவது குறித்து மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு  வடிவமைப்பு பிரிவு சென்னை அலுவலகத்திற்கு கொடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது, இந்நிலையில் இத்திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.


இது இப்பகுதி விவசாயகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியான நிலையை உண்டாக்கியுள்ள நிலையில்,ஏற்கனவே இந்த ஆற்றுப்பகுதியில் செல்லும்  நீரினை தடுத்து சுற்றுப்புறப்பகுதிகளில் நிலத்தடி நீரை சேமிக்கும் பொருட்டு  பல்வேறு இடங்களில் சிறு,சிறு தடுப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தன.


இவைகள் போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது உடைந்து பழுதடைந்து காணப்படுகின்றது,  பல்வேறு இடங்களில் முற்றிலும் தடுப்பணைகள் இல்லாத அளவு சேதமுற்றுள்ளது.இதன் காரணமாக ஆற்றில் நீரை தேக்கி வைக்கமுடியாத நிலை உள்ளது.


இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொம்மிடி சமூக ஆர்வலர் ஜெபசிங் கூறுகையில்,  வேப்பாடி ஆறு மூலம் ஏற்காடு அடிவாரத்தில் ஓர் நீர் தேக்கம் கட்டக்கூடிய அளவிற்கு நீர் வரத்து உள்ளது.ஏற்கனவே வேப்பாடி ஆற்றின் குறுக்கே செம்மியானூர் பகுதியில் சிறிய அளவினான அணை கட்ட ஆட்சியர் உட்பட பல அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர், இந்த வேப்பாடி ஆற்றின் குறுக்கே சிறிய அளவில்  பல தடுப்பணைகள் உள்ளன.


இவை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் மழை காலங்களில் ஆற்றில் ஓடும் நீரினை தடுத்து நிறுத்த வாய்ப்பு இல்லாமல் உள்ளது.பொம்மிடி நகரின் தெற்கு பகுதியில்அமைந்துள்ள இந்த ஆற்றில் உள்ள தடுப்பணைகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து நல்ல செழிப்பு உண்டாகும்,பழுதடைந்துள்ள தடுப்பணைகளால் ஆற்றில் நீர் சென்று விடுகின்றது.


இதனால் இப்பகுதியில்  நீர் மட்டம் குறைந்து கொண்டே செய்கின்றது , இதனை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.