பருவ மழை பெய்த்து போனதாலும் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்து வந்தது. இந்த நிலையில் காவிரி ஆறு வரண்டு பாறைகளாகவும் காட்சியளித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, தேன்கணிகோட்டை, தளி உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியில் இருந்து 1500 கன அடி வரை உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகளும், ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.


ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் கோடை மழை குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் குறைந்து, வினாடிக்கு 1000 கன அடியாக சரிந்தது. இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் காவிரி ஆற்றில் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் மீண்டும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து வினாடிக்கு 1500 கன அடியாக உயர்ந்து வந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1500 கன அடியிலிருந்து சரிந்து, வினாக்கு 1000 கன அடியாக குறைந்துள்ளது.


மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு கோடை மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து மாறி, மாறி குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. தற்பொழுது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கோடை மழை பெய்து வருவதாலும், மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராக இருப்பதால், ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.