தமிழகத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடு நிச்சியமாக வெற்றி பெறும் என்றும் இந்த இரண்டு நாட்களில் ரூ.10 இலட்சம் கோடி முதலீடு வரும் என்று எதிர்பார்க்கிறேன் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

தருமபுரி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை நேற்று பாலக்கோட்டில் தொடங்கினார். பாலக்கோடு முடித்துவிட்டு பாப்பாரப்பட்டியில் உள்ள  தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு இடத்தில் கட்டப்பட்டுள்ள பாரதமாதா ஆலயத்தில் பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்தும், தியாகி சுப்பிரமணி சிவா நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சுப்பிரமணிய சிவாவின் நினைவு மணி மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். 



 

இதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டி சுப்பிரமணி சிவா நினைவிடத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அண்ணாமலை, “தியாகி சுப்பிரமணிய சிவா பாரத மாதா கோயில் கட்டுவதற்கு 6 ஏக்கர் நிலத்தினை ரூ.500 வாங்கியுள்ளனர். பாரதமாதா என்றால், திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளுக்கு கெட்ட வார்த்தையாக தெரிகிறது. காவி உடையில் இருக்கும் தாய் தான் பாரதமாதா. இதை அபிந்திராநாத் தாகூர் தான் இந்தியா முழுவதும் பாரதமாதா புகைப்படத்தை வெளியிட்டார். இதனை தான் சுப்பிரமணி சிவா இங்கு ஆலயத்தில் சிலை அமைக்க வேண்டும் என்று கனவு கண்டார். 

 

தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணி சிவா கொடிநடையாக வந்துள்ளார். இந்த ஆலயத்திற்கு நினைவாலயம் என்று பெயர் வைத்துள்ளார்கள். இவர்களுக்கு இந்த வரலாறு தெரியவில்லை. அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தியாகி சுப்பிரமணி சிவா கனவு நினைவாகவில்லை. இதனால் சுப்பிரமணி சிவா இன்னும் மோட்சம் அடையாமல் இருக்கிறார். பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்க பூட்டை உடைத்தால், கைது செய்யப்பட்டால், நாங்கள் அதை பெருமையாக ஏற்றுக் கொள்கிறோம். மகாத்மா காந்தி செய்தது, குற்றம் என்றால், நாங்கள் செய்ததும் குற்றம் தான். இந்த இடத்தில் மத்திய அரசு சார்பில் நாங்கள் கோவில் கட்டி கொடுக்கிறோம். இதை தமிழக அரசே, அரசு சொத்தாக பராமரிக்கட்டும். இதில் பாஜகவுக்கு எந்த பெயரும் வேண்டாம்.

 

இந்த ஆட்சியை பொறுத்த வரையில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நிராகரிப்பது தான். தமிழ்நாட்டை பொறுத்துவரை பொங்கல் தொகுப்பை வருமான வரி கட்டுபவர்கள் என்று கட்டுப்பாடுகள் விதித்தால், இன்னும் 10 ஆண்டுகளில் எல்லா குடும்ப அட்டை தாரார்களும், வந்துவிடுவார்கள். மாநில அரசு இந்த போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். அறிவிப்பு செய்ததை, கட்டுப்பாடுகள் விதித்து நிராகரிப்பது, எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. கரும்பு வழங்க கூட கணக்கு பார்க்கிற ஆட்சி இது. 



தமிழகத்தில் தற்போது நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நிச்சியமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த இரண்டு நாட்களில் 10 இலட்சம் கோடி முதலீடு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அவ்வாறு வரவில்லை என்றால், நான் மிகுந்த ஏமாற்றம் அடைவேன்.

 

1996-ம் ஆண்டுலிருந்து, தமிழ்நாட்டிற்கு பாக்கி இருந்தது. ஆனால் மோடி பிரதமரான பிறகு எல்லா பாக்கியமும் கொடுக்க வேண்டும் என சொல்லி, காங்கிரஸ் ஆட்சி கால பாக்கியை கூட கொடுக்க சொன்னார். இதை தமிழக நிதி அமைச்சர் பேசமாட்டீங்கிறாரு. இதுவரை 10, 76,000 கோடி ருபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி யாரும் பேச கூடாது. யாரும், யாரையும் வஞ்சிக்கவில்லை. மோடி போன்று மாநில உரிமை பேசும் தலைவர்கள் யாருமில்லை” என்று பேசினார்.