தருமபுரி அருகே பொங்கல் விளையாட்டு போட்டியில், குளிர்பானம் குடித்தல், ஒரு கிலோ சில்லி சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

   
  

தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களில் பொங்கல் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தருமபுரி அடுத்த முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக காணும் பொங்கல் தினத்தை ஒட்டி மேள தாளங்களுடன் ஊர்வலமாக கிராம மக்கள் சீர்வரிசை எடுத்துக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஓட்டப் பந்தயம், இசை நாற்காலி, மாமியார் - மருமகள் கயிறு இழுத்தல், கபடி, வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு இந்த மக்கள் நாயக்கம்பட்டி கிராமத்தில் மட்டுமே மிகவும் வித்தியாசமான முறையில், குறைந்த நேரத்தில் பிரியாணி மற்றும் ஒரு கிலோ சிக்கன் சாப்பிடும் சாப்பாட்டு ராணி மற்றும் சாப்பாட்டு ராமன் போட்டி நடைபெற்றது.



 

இந்த போட்டிக்காக முக்கல்நாய்க்கன்பட்டியில் 20 கிலோ சில்லி சிக்கன் பொரித்து, சிக்கன் பிரியாணி சமைக்கப்பட்டது. தொடர்ந்து சாப்பாட்டு ராமன் மற்றும் சாப்பாட்டு ராணி போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள், இளம்பெண்களை கிராம மக்கள் முன்னிலையில் கோயில் அருகாமையில் உள்ள மைதானத்தில் அமர வைத்து, ஒரு கிலோ சிக்கன் சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இதில் 3 நிமிடத்தில் 4 இளைஞர்கள் ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிட்டு வெற்றி பெற்று, சாப்பாட்டு ராமன் பட்டத்தை பெற்றனர். அதே போல் அதிகளவு சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டியில் 21 பெண்கள் கலந்து கொண்டனர். இதில் இரண்டு பெண்கள் 3 நிமிடத்தில் பிரியாணி சாப்பிட்டு, சாப்பாட்டு ராணி பட்டத்தை பெற்றனர்.



 

மேலும் இரண்டு நிமிடத்தில் இரண்டு லிட்டர் குளிர்பானம் குடிக்கும் போட்டி மற்றும் திருமணமானவர்களுக்கு தனியாக செங்கல் தொங்கவிடும் போட்டியும் திருமணம் ஆகாதவர்களுக்கு தனியாக செங்கல் தொங்கவிடும் போட்டிகளும் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 30 இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு சில்லி சிக்கன், பிரியாணி, குளிர்பானம் குடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிராமமக்கள் பரிசுகளை வழங்கினார். மேலும் இந்த பொங்கல் விளையாட்டு போட்டியினை கிராம மக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு தருமபுரி அடுத்து முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் மட்டுமே வித்தியாசமான முறையில் இந்த அசைவ உணவுகள் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.