கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11 ஆம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் மாணவிக்கு உளவியல் ஆலோசணையும் பள்ளி நிர்வாகம் வழங்கியதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.




இந்நிலையில் மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை பிடித்து காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வந்தனர். இதையடுத்து நேற்றிரவு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.




இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யக் கோரி, உடலை மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காதது தான் தற்கொலைக்கு காரணம் எனவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


மாணவியின் தற்கொலைக்காக காரணம் குறித்து ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு சக மாணவிகள் பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள் “ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போனில் ஒரு மாதிரி சாட் செய்து வந்தார். அது குறித்து என்னிடம் கூறிய போது, ப்ளாக் செய்யுமாறு கூறினேன். அதன்படி அவளும் ப்ளாக் செய்தார். இது குறித்து வெளியே சொன்னால் எதாவது செய்து கொள்வேன் எனக் கூறியதால், வெளியே சொல்லவில்லை. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஒரு முறை பாலியல் தொல்லை அளித்தார். இச்சம்பவத்தினால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என பல முறை கூறியுள்ளார். மன அழுத்தத்துடன் காணப்பட்டார்.




ஒரு முறை அந்த மாணவி கையை அறுத்து கொண்டார். இதனால் பயந்து போய் பெற்றோரிடம் கூறுவதாக சொல்லிய போது, இனி மேல் இப்படி பண்ணமாட்டேன் என்றார். மாணவி தற்கொலைக்கு பள்ளி முதல்வர் மீரா மேடம் தான் காரணம். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு வேளை நடவடிக்கை எடுத்திருந்தால் தற்கொலை நடந்து இருக்காது. மாணவி தற்கொலைக்கு காரணமான பள்ளி முதல்வர் மீராவை கைது செய்ய வேண்டும்” என தெரிவித்தனர்.