நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள‌ காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி, தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிங்காரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்த நிலையில், குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்று, உடல் பாகங்களையும் சாப்பிட்டது.


புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், புலியை பிடிக்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக கூறும் உள்ளூர் மக்கள், புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே சுட்டுக் கொல்லக் கொள்ளாமல் உயிருடன் பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். புலியை பிடிக்கும் பணியில் இன்று 12 வது வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புலியைத் தேடும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில வனத்துறையினர், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோரும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புலி தேடுதல் வேட்டையில் 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. 3 ட்ரோன்கள் மற்றும் அதி நவீன கேமராக்கள் மூலம் புலி இருப்பிடத்தை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.




டி 23 புலியை பிடிப்பதில் வனத்துறையினருக்கு பல்வேறு சவால்களும், சிக்கல்களும் உள்ளன. இதன் காரணமாக புலியை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கோயம்புத்தூர் வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனர் முருகானந்தம் கூறும் போது, ”எம்.டி.டி23 புலியை பிடிப்பது உண்மையில் ஒரு சவாலான விஷயம். தேவன் எஸ்டேட்டில் இருந்த அந்த புலி அங்கிருந்து பயணித்து தற்போது முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு வந்துள்ளது. முதுமலை சரணாலயம் புலிகள் மறைந்து வாழும் அளவிற்கு புதர்மண்டி காணப்படும் சரணாலயம் ஆகும். புலிகள் மனிதனின் கண்ணுக்கு அகப்படாமல், எந்தளவிற்கு மறைந்து வாழ முடியுமோ அந்தளவிற்கு புதர்களில் வாழும். முதுமலை சரணாலயம் அந்த புலிக்கு சாதகமாக உள்ளது. மற்ற புலிகளும் இந்த பகுதியில் உள்ளது. இதன் காரணமாக எம்.டி.டி.23 புலியை கண்டறிவதில் சவால்களும், சிக்கல்களும் உள்ளன.




எம்.டி.டி23 புலியை பார்த்தாலுமே உடனே மயக்க மருந்தை செலுத்த முடியாது. இங்கே ஒரே சரகத்திற்குள் 4 அல்லது 5 புலிகள் இருப்பதால், அது இந்த எம்டிடி23 புலி தானா என்பதை உறுதி செய்ய வேண்டும்.  அதன் பிறகே மயக்க மருந்து செலுத்த முடியும். புலியின் கால்தடம் கிடைத்தால் அது எம்டிடி23 புலியின் கால்தடம் என்பதுதானா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்வதற்கு நேரம் எடுப்பதால் புலியை பின்தொடர்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் தேடுதல் வேட்டை சிரமமாக உள்ளது. அந்த புலி அடிக்கடி இடம் மாறி வருகிறது. வனத்துறையினர் உயிரை பணயம் வைத்து புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் எம்.டி.டி.23 புலி பிடுபடும்” என அவர் தெரிவித்தார்.