நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டும் அதிமுக பெரும்பான்மை பெற்றது. வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், அதிமுக 8 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். இதனால் இரண்டாவது முறையாக வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக தக்கவைத்தது. அதிமுக சார்பில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மருதாசலம் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்தார்.


மாவட்டம் முழுவதும் திமுக அருதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், இப்பேரூராட்சியையும் கைப்பற்ற திமுக முடிவு செய்தது. இதனால் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் நேற்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இன்று தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, அதிமுக உறுப்பினர்கள் கார் மூலம் வெள்ளலூர் வந்து கொண்டிருந்தனர். அப்போது வெள்ளலூர் அருகே 3 கார்களில் வந்த மர்ம நபர்கள் உறுப்பினர்கள் வந்த கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் உறுப்பினர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்ட போதும், குறித்த நேரத்திற்கு தேர்தல் நடக்கும் பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் அங்கு கிளம்பி சென்றனர். 




அங்கு ஏற்கனவே காத்திருந்த திமுக உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படும் நிலையில், இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பதட்டமான சூழல் காரணமாக ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர், உறுப்பினர்களை மட்டும் பேரூராட்சி அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். இதனிடையே பேரூராட்சி அலுவலகத்திற்குள் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலரான பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மற்றொரு தேதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 




இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து திமுகவினர் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். காவல் துறை மற்றும் அதிகாரிகள் துணையுடன் வெளியூர் நபர்களை தூண்டி விட்டு தாக்குதல் நடத்தினர். தேர்தலில் முறைகேடு செய்து அதிமுக வெற்றியை பறித்தார்கள். இதையும் மீறி வெள்ளலூர் பேரூராட்சியில் 8 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். அவர்கள் வந்த கார்களை 3 வண்டிகளில் வந்த கரூர் மற்றும் வெளியூர்காரர்கள் கத்தி, கம்பால் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுகவிற்கு பெரும்பான்மை உள்ளது. உடனே தலைவர் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை தள்ளி வைக்க காரணமே இல்லை. திமுகவினர் தான் பெட்டியை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். நியாயம் இல்லாமல் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி கவுன்சிலர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கவில்லை. தாக்குதல் நடத்திய திமுகவினர் அதிமுகவினர் மீது பொய் புகார் அளித்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.