கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக கிளை அலுவலகத்தில் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முரளிதரன் கலந்து கொண்டு பாஜக நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். முன்னதாக அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் பேசியதாவது, 'கோயம்புத்தூர் குறித்து பிரதமர் குறிப்பிடுகையில் பழமையோடு நவீனத்துவமும் சேர்ந்த பகுதி என குறிப்பிடுகிறார். இந்திய கலாச்சாரத்திலும் இந்துக்கள் கலாச்சாரத்திலும் சனாதன தர்மத்திலும் தமிழ்நாட்டிற்கு பழம்பெருமை மிக்க பாரம்பரியம் உள்ளது. இங்குள்ள மருதமலை கோவில் 1200 ஆண்டுகால பழமை வாய்ந்ததாகும். அந்த வகையில் தமிழக கலாச்சாரமும் பாரம்பரியமும் சனாதன தர்மத்தோடு இணைந்ததாகும்.இதை அறியாமல் தமிழ்நாட்டில் ஆட்சி செய்பவர்கள் சனாதன தர்மத்தை கொடூர நோய்களோடு ஒப்பிட்டு அழிக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் தமிழக மக்கள் அவர்களின் கருத்தை நிராகரித்து விட்டனர்.


ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அயோத்தியில் நடைபெற உள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இந்து மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் இதில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஏனென்றால் அயோத்தி என்பது ராமரின் நிலமாகும். ராமர் பிறந்த இடத்தில் கோவில் உருவாக வேண்டும் என 500 ஆண்டுகளாக மக்கள் காத்திருக்கின்றனர். பெத்லகேம் கிருத்தவர்களுக்கு புனித நகரம் என்பது போல, மெக்கா இஸ்லாமியர்களுக்கு புனித நகரம் என்பது போல, இந்துக்களுக்கு அயோத்தியா புனித நகரமாக விளங்குகிறது. அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யும்போது தமிழகத்தில் உள்ள கோவில்களில் எந்த கொண்டாட்டங்களும் இருக்கக் கூடாது என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.


இந்துக்கள் கொண்டாடுவதை தடுப்பதற்கு தமிழக அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை. நமது நாடு சுதந்திர நாடு. நமது அரசியலமைப்புச் சட்டம் விரும்பும் மதத்தினை கடைபிடிக்க அனுமதித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்து மதத்தை பின்பற்றுபவர்களும் ராமரை வழிபடுபவர்களும் ராமர் கும்பாபிஷேகத்தை கொண்டாடலாம். தமிழ்நாடு அரசு இந்தியாவில் இல்லாததாக நினைத்து அரசியலமைப்பில் இல்லாத அவர்களது கருத்துக்களை விதிமுறைகளையும் வலியுறுத்துகின்றனர். ராமர் பிரதிஷ்டை நிகழ்வை காண மொரிசியஸ் நாடு அவர்களது மக்களுக்கு விடுமுறை வழங்கி உள்ளது. இதேபோல் பல நாடுகளும் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது. ராமர் பிரதிஷ்டை அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மாநில அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளிவரலாம்.


மாநில அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசும் விடுமுறை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் பாதிப்பு இல்லை என்றால் முன்பே ராமர் கோவில் திறக்கப்பட்டிருக்கும். கோவிலை கட்டுபவர்கள் தான் அனைத்து முடிவுகளும் எடுக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியால் ராமர் கோவில் கட்டப்படவில்லை. அதற்கான அறக்கட்டளை தான் முடிவுகளை எடுக்கிறது. அதற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் எந்த எந்த சம்பந்தமும் இல்லை. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட சில மதத்தை மட்டுமே ஆதரிக்கின்றனர். இந்துக்களின் கருத்துக்களை கண்டு கொள்வதில்லை. அதனால் தான் ராமர் கோவிலுக்கு செல்வதை அரசியலாக பார்க்கின்றனர். அப்படி என்றால் கடவுள் நம்பிக்கை இல்லாத தமிழக அரசு ஏன் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் இந்து கோவில்களை நிர்வாகிக்க வேண்டும். பக்தர்களிடம் அதை கொடுத்து விடலாமே' என தெரிவித்தார்.


உதயநிதியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,'அந்த இடத்தில் மசூதி இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் அங்கு இருந்தது. அது இடிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. எந்த மதத்தினராலும் வழிபாட்டிற்காக அந்த கட்டடம் பயன்படுத்தப்படவில்ல. எனவே அவரது கருத்து பொய்யானது. அயோத்தி ராமர் பிறந்த நிலம். அங்கு ராமர் கோவில் இருந்துள்ளது என்பதை வரலாற்று பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபித்து தற்போது அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் முந்தைய நடைபயணத்தை போலவே தற்போது துவங்கியுள்ள நடை பயணமும் தோல்வியில் தான் முடியும். பிரதமர் என்பவர் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதமர் வட இந்தியா தென்னிந்தியா என பிரித்துப் பார்க்கத் தேவையில்லை.


ராமர் பிரதிஷ்டை என்பது அனைவருக்குமான விழா என்பதால் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பிரதமர் சென்று வழிபட்டு வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களுக்கு அவர் சென்று வழிபட உள்ளார். மத்திய அரசின் 'விக்சித் பாரத்' யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கேரள மாநிலத்திலும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பிரதமர் மோடியின் மக்கள் வளர்ச்சி திட்டங்களை பொதுமக்கள் சிறப்பாக வரவேற்கின்றனர்' என தெரிவித்தார்.